Vaiko: அன்று திமுக எதிர்ப்பு.. இன்று கூட்டணி ஏன்?.. வைகோ சொன்ன குட்டி ஃபிளாஷ்பேக்!
தமிழ்நாட்டின் நலன் தான் என் குறிக்கோள். நான் 30 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றியவன். சில காரணங்கள் நான் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது மதிமுக இயக்கத்தை தொடங்க நேர்ந்தது என வைகோ கூறியுள்ளார்.

திமுகவில் இருந்து வெளியேறி அந்த கட்சியை விமர்சித்த நிலையில் மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் களம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணியில் மதிமுக அமைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேரைவத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கடற்கரைராஜை ஆதரித்து சாத்தூர் வடக்கு ரத வீதியில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வைகோ திமுக கூட்டணியில் மதிமுக இணைந்தது பற்றி பேசியுள்ளார்.
நான் மதங்களுக்கு விரோதி இல்லை
தமிழ்நாட்டின் நலன் தான் என்னுடைய குறிக்கோள். நான் 30 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றியவன். 25 முறை திமுக தரப்பில் சிறை சென்றவன். காரணங்கள் சிலவற்றால் நான் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது மதிமுக என்றொரு இயக்கத்தை தொடங்க நேர்ந்தது. இப்படியெல்லாம் திமுகவை எதிர்த்த நீ, இன்றைக்கு வாய்கிழிய பேசுகிறாயே என்று சிலர் வசை பாடலாம். அரசியலில் எதற்காக முடிவெடுக்கிறோம். திராவிட இயக்கத்தின் இரத்தம் என் உடலில் ஓடுகிறது. பெரியார், அண்ணா போற்றி வளர்த்த இயக்கம். கண்ணீரால், வியர்வையால், இரத்தத்தால் கட்டியெழுப்பப்பட்டது திராவிட இயக்கம். அதை தகர்ப்பதற்கு சில சக்திகள் மதத்தின் பெயரால் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. நான் மதங்களுக்கு விரோதி இல்லை.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலினை கோவை விமான நிலையத்தில் அவரை சந்தித்தேன். நான் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்புவதாக சொன்னேன். அவர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். அப்போது நோய்வாய்ப்பட்ட கலைஞர் கருணாநிதியிடம் அதனை ஸ்டாலின் சொன்னார். அழைத்துக்கொண்டு வா என் தம்பியை என கருணாநிதி சொன்னதால் ஸ்டாலின் கூப்பிட்டார். நாங்கள் இருவரும் கலைஞரின் அருகில் சென்றோம்.
கண் கலங்கிய கருணாநிதி
அவர் காதில் மு.க.ஸ்டாலின், அப்பா வைகோ வந்திருக்கிறார் என கூறினார். இரண்டு முறை சொன்னதும் அப்படியே நிமிர்ந்து மேலே பார்த்ததும் அவர் கண்கள் கலங்கியது. நான் உடனே, உங்களுடன் 30 ஆண்டுகள் மெய்காப்பாளானாக, உங்கள் மீது சிறுதுரும்பும் படாத விடாதவனாக, உயிரை துச்சமென மதிப்பனாகவும் இருந்தேன். இடைக்காலத்தில் சில காரணங்களால் நான் வேறுபட்டு போயிருக்கலாம். இப்போது மீண்டும் கரம் கோர்க்க வந்தேன் என சொன்னேன்"என்று வைகோ கூறியுள்ளார்.




















