Stalin Slams EPS: “சங்கியாகவே மாறிவிட்டார் பழனிசாமி, தமிழ்நாட்டை விற்றுவிடுவார்“ இபிஎஸ்-ஐ விளாசிய ஸ்டாலின்
திருச்சியில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமயை கடுமையாக சாடினார். அவர் முழு சங்கியாகவே மாறிவிட்டதாக அவர் விமர்சித்தார்.

திருச்சியில் நடந்த 9 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார். அவரது பேச்சின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
“அதிமுகவை அடிமைக் கூட்டமாக சீரழித்திருப்பதுதான் பழனிசாமியின் சாதனை“
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாய் இருக்கிறது என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று அவர் பேசிக்கொண்டிருப்பதாக சாடினார். ஏற்கனவே, 2021 தேர்தலில் மகளிர் உரிமைத் தொகையாக 1,000 ரூபாய் வழங்குவோம் என்று நாங்கள் கூறிய உடனே, அவசரஅவசரமாக தன்னுடைய ஜெராக்ஸ் மெஷினை ஆன் செய்து, 1,500 ரூபாய் தருவோம் என அறிக்கை வெளியிட்டதாக விமர்சித்தார்.
அவருடைய வாய்ச்சவுடாலும், ஆட்சியின் அலங்கோலமான நிர்வாகம் பற்றியும் தெரிந்து, மக்களாகிய நீங்கள் அவரை புறக்கணித்தீர்கள் என்று கூறிய மு.க. ஸ்டாலின், இப்போதும் மக்களுக்கு நல்லது நடக்கக்கூடாது என்ற வயிற்றெரிச்சலில், தன்னைப் போலவே பிறரையும் நினைத்து, ஊழல் நடக்கும் என்று பேசிவருவதாக எடப்பாடி பழனிசாமியை சாடினார்.
மதுரையில் நடந்த கூட்டத்தில் தந்தை பெரியாரின் படம் இடட்மபெறக்கூடாது என்று பாஜக கூறியதும், சுயமரியாதையே இல்லாமல் அதை எடுக்கத் துணிந்தவர்தான் பழனிசாமி என்று கூறிய ஸ்டாலின், அதே மதுரை கூட்டத்தில், தந்தை பெரியார் மற்றும் அண்ணாவை கொச்சைப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட காணொலியை பார்த்து, அதிமுக அமைச்சர்கள் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்ததாக சுட்டிக்காட்டினார்.
மேலும், அதிமுக என்ற கட்சியை அடிமைக் கூட்டமாக சீரழித்திருப்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஒரே சாதனை என குறிப்பிட்ட முதலமைச்சர், திராவிடம் என்ற சொல் அவமானப்படுத்தப்பட்டபோது, திராவிடம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது, நான் புராணங்களை படித்ததில்லை என்று கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார்.
“சிஐஏ சட்டத்தை பழனிசாமி ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா.? இப்போது சொல்லட்டும்“
யார் எக்கேடும் கெட்டாலும் பரவாயில்லை என்று, தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பாஜகவின் பாதம் தாங்கியாக இருப்பவர்தான் பழனிசாமி என கடுமையாக விமர்சித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து, மாநிலங்களவையில் அது நிறைவேற துணைபோன கட்சிதான் அதிமுக என்றும், அதற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் ரத்தக்கரை அதிமுக கையில் தான் இருக்கிறது, ஆனால் இவ்வளவு நடந்த பிறகும், யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது, எந்த இஸ்லாமியர் பாதிக்கப்பட்டார் என்று காட்டுங்கள் என்று சொன்னவர்தான் எடப்பாடி பழனிசாமி என்றும் குற்றம்சாட்டினார் ஸ்டாலின்.
ஆனால், சிறுபான்மையினர் வாக்கு வேண்டும் என்று, 2024 தேர்தலில் தனியாக நின்று நாடகமாடியபோது, சிஐஏ சட்டத்தை கண்டிப்பதாக பழனிசாமி பல்டி அடித்ததாகவும், சிஐஏ சட்டம் ஒரு வரலாற்று பிழை என்று பிலேட்டை அப்படியே திருப்பிப் போட்டார் என்றும் சாடினார்.
தொடர்ந்து, இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அந்த சட்டதை ஆதரிக்கிறாரா எதிர்க்கிறாரா என்று தைரியமிருந்தால் வெளிப்படையாக கூறட்டும் என்று சவால் விடுத்தார். இதேபோல், 3 வேளாண் சட்டங்களை பாஜக கொண்டுவந்த போதும், கண்ணை மூடிக்கொண்டு அவர் அதை ஆதரித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
“முழு சங்கியாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி“
இப்படி பாஜக உடன் கூட்டணி சேர்ந்து, முழுதாக சந்திரமுகியாக பழனிசாமி மாறியிரப்பதாக, அதாவது, முழு சங்கியாகவே மாறிவிட்டார் என்று கடுமையாக விமர்சித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
மேலும், கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று கூறிக்கொள்ளும்போது, எல்லா கட்சிகளும் ஏன் பாஜகவிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று கேட்ட ஸ்டாலின், இது, படையப்பா படத்தில் வரும் காமெடி போல், மாப்பிள்ளை அவர் தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்று கூறுவதுபோல் இருப்பதாக கிண்டலடித்தார். மேலும், கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கும்போது, அதில் உள்ள சிறிய கட்சிகள், அதிமுக அல்லாமல் ஏன் பாஜகவின் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதோடு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவோம் என்று பிரதமர் மோடி எப்போவாவது கூறியிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், அதிமுகவின் பெயரைக் கூட அவர் சொன்னதுபோல் தெரியவில்லை, என்டிஏ அரசு என்று தான் கூறிகிறார் என விமர்சித்தார்.
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை விற்றுவிடுவார் பழனிசாமி“
மேலும், தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்க பாஜகவிடம் கட்சியை பழனிசாமி அடகு வைத்துவிட்டதாகவும், மக்கள் வாக்களிக்காமலேயே, எம்எல்ஏ-க்களை ஏலம் எடுத்து ஒரு முறை அவர் முதலமைச்சராகிவிட்டதாகவும், மீண்டும் அவர் கையில் ஆட்சி போனால், தமிழ்நாட்டை அடகு வைத்துவிடுவார், அல்லது விற்றே விடுவார் என்று கடுமையாக விமர்சித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.




















