TN Election 2026: பரபரப்பான தேர்தல் களம்! ஸ்டார் தொகுதியான பெரம்பூர்.. மும்முனை போட்டியில் வெற்றி யாருக்கு?
TN Election 2026: சென்னையிலேயே அதிகப்படியான வேட்பாளர்கள் (47 பேர்) போட்டியிடும் தொகுதி பெரம்பூர் என்றாலும், பிரதானப் போட்டி இந்த மூன்று முனைக்குள்ளேயே சுருங்கியுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுவதால் அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாக காணப்படுகிறது. திமுக கூட்டணி சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகரே மூன்றாம் முறையாகக் களம் காண்கிறார். அரசியலின் புதுவரவாகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் களம் காணும் தவெக தலைவர் விஜய்யும் இதே தொகுதியைத் தான் தேர்ந்தெடுத்துள்ளார். விஜயின் வரவால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள பெரம்பூர் தொகுதியில், இத்தனை ஆண்களுக்கு மத்தியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் ம.திலகபாமா போட்டியிடுகிறார் சென்னையிலேயே அதிகப்படியான வேட்பாளர்கள் (47 பேர்) போட்டியிடும் தொகுதி இது என்றாலும், பிரதானப் போட்டி இந்த மூன்று முனைக்குள்ளேயே சுருங்கியுள்ளது.
திமுக :
தேர்தல் என்பது ஆளுங்கட்சிக்கு பல அனுகூலங்களைத் தந்தாலும், ஐந்தாண்டு கால ஆட்சியை எடைபோடுவதற்கான காலம் என்பதால் கம்பி மேல் நடப்பதைப் போலத்தான் இருக்கும். எதிர்ப்புகளைத் தாண்டி ஆளுங்கட்சியின் தேர்தல் நேரத்து வாக்குறுதிகளும், சிறப்புக் கவனிப்புகளும் ஈர்க்கும் பட்சத்தில் அது மற்றுமொரு வாய்ப்பை வழங்குவதாக அமையும். அப்படியொரு வாய்ப்பு ஆர்.டி.சேகருக்கு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழாண்டுகள் தொகுதி அவர் வசம் தான் இருந்தது. குப்பைக்கென பேர் போன கொடுங்கையூரும் இங்குதான் இருக்கிறது.
இரண்டாண்டுகள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,வாகவும், ஐந்தாண்டுகள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாகவும் வாய்ப்புக் கிடைத்த ஒருவர் தொகுதிக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை என்பதுதான் தொகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
மழைக்காலங்களில் வீதிகளுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் வந்துவிடும் கழிவுநீரை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் சேகர் செய்யவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.
கொடுங்கையூர் குப்பைக்கிடங்கிற்குத் தீர்வு காணவோ, காற்று மாசைக் கட்டுப்படுத்தவோ, சுத்தமான குடிநீர் வழங்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் தொகுதி வாசிகள். இதையெல்லாம் மறைப்பதற்காகவே திமுக இளைஞர் அணியில் இருந்து மாவட்டவாரியாக தலா பத்துப் பேர் வீதம் ஆயிரம் பேரை களத்தில் இறக்கியிருக்கிறது திமுக. அவர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இளம் வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
தவெக :
எப்போதாவது தமிழக அரசியலில் ஒரு அலை உருவாகும். அப்படி இந்த சட்டமன்றத் தேர்தலில் உருவான அலைதான் விஜய் அலை. உச்சத்தை விட்டு விட்டு, பல இழப்புகளைப் சந்தித்து, பல வலிகளைத் தாங்கிக் கொண்டு மக்களுக்காக அரசியலுக்காக வந்திருப்பதாக விஜயே சொன்னாலும் என்ன இழப்பு, என்ன வலி என்று மக்கள் திருப்பிக் கேட்கும் காலத்தில் விஜய் அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார்.
அதையெல்லாம் தாண்டி திராவிடக் கட்சி எதிர்ப்பாளர்களும், மாற்று அரசியலை விரும்பும் இளைஞர்களும் விஜயை சிறந்ததொரு மாற்றாக நினைக்கத் தொடங்கினர். ஆனால் அது வெகுகாலத்திற்கு நீடிக்கவில்லை. கரூரில் நடைபெற்ற பெரும் துயரச் சம்பவமும், அதற்குப் பிறகான விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளும், சமூக வலைதளப் பக்கங்களில் விஜயின் ரசிகர்கள் என்ற பெயரில் ஆபாசத்தை விதைப்பவர்களாலும் அந்த நம்பிக்கை உடையத் தொடங்கி விட்டது.
வெற்றியோ தோல்வியோ நேரடியாக களம் கண்டு அதை ஏற்பவன்தான் உண்மையான வீரன். அவன்தான் தலைவன். எங்கெல்லாம் குரல் வேண்டுமோ அங்கெல்லாம் அமைதி காத்து, எங்கெல்லாம் களத்தில் இறங்க வேண்டுமோ அங்கெல்லாம் வீட்டிற்குள்ளேயே பதுங்கிக் கொண்டு, எப்போதெல்லாம் கட்சியைப் பலப்படுத்த வேண்டுமோ, அப்போதெல்லாம் காலத்தை வீணாக்கி விட்டு தற்போது தன்மீதே நம்பிக்கை இல்லாமல் இரண்டு இடங்களில் களம் காண்கிறார் விஜய். பெரம்பூர் தொகுதியைப் பொறுத்தவரை தவெகவின் கட்டுமானம் பெரியளவில் இல்லை. பரப்புரை “ரத்து”களால் நிரம்பி வழிகிறது அவரது டைரி. அவரைப் போலவே அவரது ரசிகர்கள் அல்லது தொண்டர்களும் களத்திற்கு வருவதில்லை.
தவெக ஆப் மூலமாக 40 ஆயிரம் பேர் இணைந்திருக்கிறார்கள் என்று கட்சி நிர்வாகிகள் சொன்ன தகவலை நம்பி பெரம்பூரில் களம் காண்கிறார் விஜய். களப்பணி ஆற்றாதவருக்கு, நேரடியாக வானத்தில் இருந்து குதித்து, முதலமைச்சராகும் ஆசையுள்ளவருக்கு மக்கள் வைத்திருக்கும் பதில் என்ன?
அதிமுக கூட்டணியில் பாமக :
அதிமுக ஏற்கனவே இங்கு வெற்றிபெற்ற தொகுதிதான் என்றாலும் பெரிய அளவிற்கு செல்வாக்கு செலுத்த முடியாத தொகுதியாக பெரம்பூர் இருக்கிறது. ஆனால் இந்த முறை விஜய்யின் நேரடிப் போட்டியால் திமுகவின் வாக்குகள் கண்டிப்பாக பிரியும் என்ற நம்பிக்கையில் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர் முதற்கொண்டு அனைத்து நிர்வாகிகளும் களத்தில் தீவிரமாக இறங்கிப் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொகுதி, கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா இங்கு களம் காண்கிறார். சிவகாசியில் பல்வேறு சமூகப் பணிகள் மூலமாகவும், எழுத்தாளர் என்ற அடையாளத்தின் வாயிலாகவும் பாமகவிற்கு வந்து சேர்ந்தவர் திலகபாமா. தொகுதிக்குப் புதியவர் என்பதால் தொகுதி மக்களிடையே ஆரம்ப காலகட்டத்தில் பெரியளவில் வரவேற்பு ஏதுமில்லை. ஆனால் வீதிகள் தோறும், வீடுகள் தோறும் அவர் சென்று அவர்களது பிரச்சனைகளைக் கேட்டு, நான் எம்.எல்.ஏ.,வானால் கண்டிப்பாகத் தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி அளித்து நம்ம வீட்டுப் பெண் என்கிற இமேஜை உருவாக்கிவிட்டார்.
24 மணி நேரமும் இயங்கி வந்த மதுபானக் கடையை முற்றுகையிட்டு மூட வைத்தது, திமுகவின் பணப்பட்டுவாடாவைத் தடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை சம்பவ இடத்திற்கு வரவைத்தது, மாலை, பொன்னாடைகள் வேண்டாம், அதற்காகும் செலவை எளிய குடும்ப பிள்ளைகளின் கல்விச் செலவிற்குப் பயன்படுத்துவோம் என அறிவித்து நடைமுறைப்படுத்தியது, அரசின் போதைக் கலாச்சாரத்தை தோலுரிக்கும் வகையில் மேடை நாடகங்களை நடத்திக் காட்டியது, என் மக்கள் என் வாக்குறுதிகள் 25 என பெரம்பூர் தொகுதிக்கென தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது என பரப்புரைக்கு நடுவே திலகபாமா செய்த ஒவ்வொரு சம்பவமும் அதகளம்.
புதிய வேட்பாளராக இருந்தாலும், தனது செயல்பாடுகளின் மூலம் திலகபாமா தொகுதி மக்களிடையே கவனிக்கத்தக்க ஒருவராக மாறியிருக்கிறார். ஒரு பெண் பிரதிநிதியைச் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்கிற எண்ணம் அந்தத் தொகுதி மக்களிடம் பரவலாக இருப்பதை உணர முடிகிறது. எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகளும், மத்திய அரசின் திட்டங்களும் திலகபாமாவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்




















