MK Stalin: ஆயிரம் எமர்ஜென்சிகளை பார்க்க நான் தயார்.. மத்திய அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு நான் திட்டங்களைப் பார்த்து பார்த்து செய்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு என்ன நிலையில் இருந்தது நம் அனைவருக்கும் தெரியும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தன்மானமுள்ள தமிழர்கள் டெல்லிக்கு அடிபணியமாட்டார்கள். தமிழ்நாட்டின் போராட்ட குணத்தைப் பார்க்க டெல்லி ஆசைப்பட வேண்டாம் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு பரப்புரைக்காக வருகை தந்தார். மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கருப்பு சட்டை பணிந்து பங்கேற்றார். தொடர்ந்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய அவர் நாமக்கல் மாவட்டத்தில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டை ஒடுக்க பாஜகவின் சதி தான் தொகுதி மறுவரையறையாகும். தமிழர்களுக்காக போராட நான் தயாராக இருக்கிறேன். கருப்புக் கொடி போராட்டம் வெறும் ட்ரெயிலர் தான். நான் டெல்லிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
ஆயிரம் எமர்ஜென்சிகளை பார்க்க நான் தயாராக இருக்கிறேன். தன்மானமுள்ள தமிழர்கள் டெல்லிக்கு அடிபணியமாட்டார்கள். தமிழ்நாட்டின் போராட்ட குணத்தைப் பார்க்க டெல்லி ஆசைப்பட வேண்டாம். மாநில மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்கு தண்டனை வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி மாநில உரிமைகளை பறிக்கிறார். அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகள் பற்றி பேசினார். 2029ல் மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவோம் என சொன்னவர்கள் இன்று அவசர அவசரமாக அதனை கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு நான் திட்டங்களைப் பார்த்து பார்த்து செய்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு என்ன நிலையில் இருந்தது நம் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் வளர்ச்சி நாசமாகி விடும். கலவரங்கள் வெடிக்கும். அதிமுகவுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் தமிழக வளர்ச்சிக்கான தடை கல்லாகும். கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது.திமுக ஆட்சியில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக மாற்றி தலை நிமிர வைத்துள்ளோம்.
1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கினோம். நாட்டின் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளோம். தோழி விடுதி திட்டத்தை மத்திய அரசு பின்பற்றவுள்ளது. வரும் தேர்தலில் ஜெயித்தவுடன் மகளிருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை எக்ஸ்சேஞ்ச் அல்லது புதிதாக வாங்கி கொள்ளலாம். அத்தகைய இல்லத்தரசி திட்டம் முழுக்க பெண்களுக்காக உருவாக்கப்பட்டது.
நான் சொன்னால், சொன்னதை செய்வோம். தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்க பாஜக சதி செய்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் உரிமைக்கான போர் நடந்து கொண்டிருக்கிறது" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















