MK Stalin: விஜய் பற்றி பேச மறுப்பது ஏன்? - உண்மையை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள விஜயின் தவெக திமுகவை அரசியல் எதிரி என கூறிக்கொண்டு தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக தரப்பு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என்னைப் பற்றி விமர்சனம் வைத்தாலும் பதில் சொல்லாமல் தவிர்ப்பது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
திமுக vs தவெக
ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் முதல்முறையாக களம் கண்டுள்ள விஜயின் தவெக திமுகவை அரசியல் எதிரி என கூறிக்கொண்டு தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. எங்கு சென்றாலும் திமுக ஒரு தீய சக்தி, அக்கட்சி பாஜகவுடன் மறைமுக தொடர்பு கொண்டிருக்கிறது என விஜய் குற்றம் சாட்டி வருகிறார். அதேசமயம் அவர் பாஜக, அதிமுக கட்சிகளின் பெயர்களை சொல்லவும் மறுக்கிறார்.
விஜய்க்கு பதில் சொல்ல மறுப்பது ஏன்?
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவரிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக பேசுகிறீர்கள். ஆனால் இந்த தேர்தலில் புதிதாக களம் கண்டுள்ள தவெக தலைவர் விஜய் உங்களை கடுமையாக விமர்சனம் செய்கிறார். நீங்கள் பதில் சொல்லாமல் தவிர்ப்பது ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமியை கூட நான் கடுமையாக பேசுவதில்லை. அவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் கேள்விகள் கேட்கும்போதும், சில பிரச்னைகள் பற்றி பேசும்போதும் அதற்கு தகுந்த பதிலை தான் சொல்கிறேன். கடுமையாகவும், அதிகமாக விமர்சனமும் வைப்பதில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை புதிதாக கட்சி தொடங்குகிறவர்கள், அரசியல் பழக வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாரும் திமுகவை விமர்சனம் செய்து தான் பழக்கம். அது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இன்றைய சூழலில் திமுக அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. பல உலக நாடுகள் செல்லும்போது அங்கிருக்கும் தமிழர்களைப் பார்க்கும்போது திமுகவினரால் தான் நான் இங்கு வந்து வேலை செய்கிறேன். கலைஞர் இல்லையென்றால் இது நடந்திருக்காது. இட ஒதுக்கீடு கொடுத்து எனக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் திமுகவைப் பற்றி தான் புகழ்ந்து பேசுகிறார்கள்.
திமுக தான் எங்களுக்கு உந்து சக்தியாக இருப்பதாக சொல்கிறார்கள். இதனாலேயே யார் வந்தாலும் திமுகவை எதிர்த்தோ, இந்த கட்சியை விமர்சனம் செய்தோ தான் வளர முடியும் என நினைக்கிறார்கள். அது தவறு. திமுக ஒரு ஆக்க சக்தி. இன்றைக்கு ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் வருவதற்கு திமுக ஆட்சி தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















