DMK DMDK Seat Sharing: திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. தேமுதிக எத்தனை தொகதிகளில் போட்டியிடுகிறது தெரியுமா.?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. இந்நிலையில், தேமுதிகவிற்கான தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்ற நிலையில், அக்கட்சிக்கு 10 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கியுள்ளது. 21 கட்சிகளை கொண்ட கூட்டணியில், ஒவ்வொரு கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த ஒரு மாதமாகவே திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
மதிமுகவிற்கு 4 தொகுதிகளும், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த முறை 6 தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நிலையில், 4 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் உறுதியாக இருந்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு பேச்சுவார்த்தையானது இழுபறியாகவே நீடித்து வந்தது.
இந்த நிலையில், நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது.
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
இதைத் தொடர்ந்து, இன்று மாலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் எல்.கே. சுதீஷ போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரேமலதா பேட்டி
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, இந்த மதச்சார்பற்ற கூட்டணி 200 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தெரிவித்தார். மேலும், தேமுதிக சார்பில் நாளை 5 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாகவும், அந்த குழுவை திமுக அழைத்து, நாளை மற்றும் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தியபின், அந்தந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, 27-ம் தேதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, 1-ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அன்றே தேமுதிகவும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் பிரேமலதா கூறினார்.
அதோடு, தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலை வழங்கியிருப்பதாகவும், அது குறித்து பேசி பட்டியல் இறுதி செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.




















