திருப்பத்தூர் MLA-வாக ஜெயித்தால் இதை கட்டாயம் செய்வேன்... உடனே ஆதரவு தந்த பெண்கள்.. நாதக வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி என்ன?
திருப்பத்தூரில் விவசாயிடம் மண்வெட்டியை வாங்கி தண்ணீர் மடக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் வேட்பாளர்.

திருப்பத்தூரில் "எம்.எல்.ஏ வாக ஜெயித்தால் முருகர் கோயிலை சுற்றுலா தலமாக மாற்றுவேன் “ நிலத்தில் இறங்கி தண்ணீர் மடக்கி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் ராணுவ வீரர் ஆறுமுகம் களம் இறங்கி உள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இன்று திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை முருகன் ஆலயத்தில் முருகருக்கு பூஜை செய்து பின்னர் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பின்னர் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது பசலிகுட்டை பகுதியில் கேழ்வரகு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த விவசாயிடம் வாக்கு கேட்க சென்று, அவர் வைத்து இருந்த மண்வெட்டியை வாங்கி வேட்பாளர் ஆறுமுகம் தண்ணீர் மடக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன் பின்னர், அதே பகுதியில் 100 நாள் வேலை செய்து கொண்டு இருந்த பெண்களிடம், ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை எனக்கு வாக்கு அளியுங்கள், நான் வெற்றி பெற்று வந்தால் 100 நாள் வேலையை அரசு வேலையாக மாற்றுவேன்’ என்றும், ‘பசலிகுட்டை முருகன் கோவிலை சுற்றுலா தலமாக மாற்றுவேன்’ என்றும் வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள் அனைவரும் நாங்கள் உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியதால் வேட்பாளர் ஆறுமுகம் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.





















