Selvaperunthagai: காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகும் செல்வப்பெருந்தகை.. அடுத்து என்ன பிளான்?
நான் பதவி விலகுவதில் எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது.இந்த 2 ஆண்டுகளில் நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பது தலைவர்களுக்கு நன்றாக தெரியும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதியும், ஒரு மக்களவை உறுப்பினர் சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவதில் கடும் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக தமிழக காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் கோஷ்டி மோதல் மிகப்பெரிய சிக்கலை வேட்பாளர் தேர்வில் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுரை மேலூர் தொகுதி தவிர்த்து மீதமுள்ள 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் சிட்டிங் எம்.எல்.ஏ., 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுகிறார். அவர் இந்த முறை சென்னை எழும்பூரில் போட்டியிடுவார் என சொல்லப்பட்ட நிலையில் தொகுதி பங்கீட்டில் எழும்பூர் திமுக வசம் சென்றிருந்தது. இப்படியான நிலையில் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இதனிடையே மாங்காட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை செல்வப்பெருந்தகை சந்தித்தப் பின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பிள்ளையாக இருந்தவன். அதன்பின் தமிழ்நாடு மக்களின் பிள்ளையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்தேன். தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டு மக்களின் பிள்ளையாக வேறு யாராவது வேலை செய்வார்கள். நான் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பிள்ளையாக மாறுவேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2 ஆண்டுகள் மனநிறைவோடு பணி செய்தேன். தேர்தல் முடிந்து வெற்றி வாகை சூடி அந்த வெற்றிக் கனிகளை ராகுல்காந்தியிடம் கொடுத்துவிட்டு மீண்டும் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் மட்டும்தான் மக்கள் பணி செய்வேன். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் பெற்றது போல 100க்கு 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம்.
நான் பதவி விலகுவதில் எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது.இந்த 2 ஆண்டுகளில் நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பது தலைவர்களுக்கு நன்றாக தெரியும். தொகுதிப் பணி செய்யப்போவது பற்றி நான் கட்சித் தலைமையிடம் பேசிவிட முடிவு செய்துள்ளேன். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக முகமூடியோடு இறங்கி இருக்கின்ற அதிமுகவை நாம் தோற்கடிக்க வேண்டும்” எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.




















