Premalatha: "பெண்களுக்கு ஒன்று என்றால் அண்ணனிடம் உரிமையாக பேசுவேன்..." பிரேமலதா விஜயகாந்த்
சேலத்தில் நடந்த திமுக பரப்புரை மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேசிய விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சிகளின் பரப்புரை அனல் பறந்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை சேலத்தில் நேற்று நடத்தியது.
5 ஆண்டு ஆட்சியில் எதிர்ப்பு அலை:
இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்தால் எதிர்ப்பு அலை இருக்கும் என்பதால் அவருடைய நண்பராகிய கேப்டனின் தேமுதிக-வை அழைத்து இந்த கூட்டணியில் இணைத்து உரிய மரியாதை கொடுத்தாரே அங்குதான் கேம் சேஞ்ச் ஆரம்பிக்கிறது. அன்றே மக்கள் முடிவு செய்துவிட்டனர் இவர்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறார்கள். 7வது முறையாக திமுக-வும், 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் என்று முடிவு செய்துவிட்டனர்.
அண்ணனிடம் பேசுவேன்:
தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் அண்ணன் மீது உள்ளது. அதுவும் இந்த பெண்கள் கூட்டத்தில் சொல்கிறேன். எங்குப் பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் இருக்கிறது. இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். வேற ஒன்றும் சொல்ல முடியாது இந்த ஆட்சி மீது. அப்படி ஏதாவது ஒரு பெண்ணுக்கு எங்கேயாவது ஏதாவது என்றால் அண்ணனிடம் நான் உரிமையாக பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ன இப்புடி டக்குனு உண்மைய பேசிட்டாங்க !! pic.twitter.com/QDMlDMvscN
— Prashanth Rangaswamy (@itisprashanth) April 16, 2026
திமுக-வினர் அதிர்ச்சி:
பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக முதன்முறையாக திமுக-வுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. எதிர்க்கட்சியினர் திமுக அரசு மீது பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் அதிகரிப்பு குற்றச்சாட்டை மிகவும் வலுவாக முன் எடுத்து வைத்து வரும் சூழலில், கூட்டணியில் இடம்பிடித்துள்ள தேமுதிக-வின் பொதுச்செயலாளரே வெளிப்படையாகவே திமுக அரசு மீதான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்பே மேடையில் கூறியிருப்பது திமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 5 வருடம் ஆட்சியில் இருந்தால் எதிர்ப்பு அலை இருக்கத்தான் செய்யும் என்றும் திமுக அரசு மீது எதிர்ப்பு அலை இருப்பது போலவும், தேமுதிக வருகையால்தான் தற்போது அது நீங்கியிருப்பது போல பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பதும் திமுக-வினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
வைரலாகும் வீடியோ:
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் பட்டியலிட்டு பரப்புரை மேற்கொண்டு வரும் சூழலில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்திலே பிரேமலதா விஜயகாந்த் பேசிய வீடியோவை எதிர்க்கட்சியினர் இணையத்தில் பரப்பி வருகின்றனர். அதேசமயம், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் பிரேமலதா இந்த பொதுக்கூட்டத்தில் பட்டியலிட்டு பேசினார்.
TVK Vijay: ”தவெக பெண் நிர்வாகியை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி” வைரலாகும் அரைநிர்வாண வீடியோ
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















