பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
பெரம்பூரில் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக பாமக வேட்பாளர் திலகபாமா நள்ளிரவில் நேரில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். முதன்முறையாக அரசியல் களத்தில் புகுந்துள்ள தவெக மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா?
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். குறிப்பாக, பெரம்பூர் தொகுதி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் ஆர்டி சேகர், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் சார்பில் வெற்றித் தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த சூழலில், பெரம்பூர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதாக நேற்று நள்ளிரவு பாமக வேட்பாளர் திலகபாமா-விற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் தனது கட்சியினருடனும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும், தேர்தல் பறக்கும் படையினருடனருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
பாமக வேட்பாளர் திலகபாமா:
ஆனால், சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினரும், காவல்துறையினரும் தாமதமாக வந்ததாக திலகபாமா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இந்த பணப்பட்டுவாடா கார் மூலமாக திமுக -வினர் மேற்கொண்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் திலகபாமா, அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே நள்ளிரவு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திலகபாமா ரூபாய் 5 கோடி இருந்ததாக சந்தேகம் இருந்தும், அது எப்படி மாயமானது? சம்பவ நேரத்தில் பொறுப்பான தேர்தல் அதிகாரி இல்லாமல் ஒரு ஊழியர் மட்டுமே பதில் அளித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
பெரும் பரபரப்பு:
பெரம்பூர் தொகுதியில் திடீரென நேற்று இரவு நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் குவிந்ததால் சற்று பதற்றமும் உண்டாகியது. பெரம்பூர் தொகுதி இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தொகுதியாக உருவெடுத்துள்ளது.
சென்னையில் அதிக வாக்காளர்கள் கொண்ட 2வது தொகுதியாக திகழும் பெரம்பூரில் சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு நிகரான எதிர்பார்ப்பை இந்த தொகுதியின் முடிவுகளும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் விஜய் - ஆர்டி சேகர் - திலகபாமா இடையே கடும் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்



















