MK Stalin: மனசாட்சியே இல்லையா? - ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் மீது கடும் விமர்சனம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் பலரும் அந்த தொகுதி மக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இணையவாசிகள் பலரும் அத்தொகுதி மக்களை கடுமையாக சாடியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தோல்வி
234 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. இதில் திமுக முதலமைச்சர் வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார் என்ற செய்தியை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய கோட்டை கொளத்தூர் என சொல்லிக்கொள்ளும் ஸ்டாலினுக்கே இந்த தோல்வி மிகவும் அதிர்ச்சியான ஒன்று தான்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் மு.க.ஸ்டாலின் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். சுயேச்சைகள் உட்பட கொளத்தூர் தொகுதியில் இம்முறை 34 வேட்பாளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தபோது அதில் கொளத்தூரில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு அதிமுகவில் இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் பெற்றார். அவர் மு.க.ஸ்டாலினை வென்றது ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதிமுகவின் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியால் கூட செய்ய முடியாததை தான் களம் கண்ட முதல் தேர்தலில் விஜய் செய்து முடித்து விட்டதாக தவெக தொண்டர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
கொளத்தூர் மக்கள் மீது கடும் விமர்சனம்
இதனிடையே மு.க.ஸ்டாலின் 1984ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் கிட்டதட்ட 2006ம் ஆண்டு வரை 6 முறை போட்டியிட்டார். இதில் 4 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் அடைந்தார். அதன்பின்னர் தனது தொகுதியை கொளத்தூராக 2011ம் ஆண்டு முதல் மாற்றிக் கொண்டார். அன்று முதல் 3 சட்டமன்ற தேர்தலிலும் அவர் மகத்தான வெற்றி பெற்றார். இதில் 2021 தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான நிலையில் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றது.
அந்த தொகுதிக்கு என ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து ஸ்டாலின் செய்துள்ளார். சாலைகள் தொடங்கி பேருந்து நிறுத்தம், விளையாட்டு மைதானம், மருத்துவமனை என திமுக அரசின் திட்டங்களால் கொளத்தூர் மிகப்பெரிய அளவில் முன்னேறியது. அப்படி இருக்கும்போது அவரை தோற்கடிக்க உங்களுக்கு எப்படி தோன்றியது, உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா, திட்டங்கள் தொடங்கி தொகுதிக்கான சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு இப்படி வாக்கை மாற்றி செலுத்தியது நியாயமா? என இணையவாசிகள் சரமாரியாக கொளத்தூர் மக்களை கேள்வியெழுப்பி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்



















