Seeman: எங்க பாதுகாப்பு பற்றி பேச மாட்டிங்களா? - சீமானை சுற்றி வளைத்து பெண்கள் சரமாரி கேள்வி!
முதலாளிகளுக்கான அரசியல், அதிகாரம் தான் நீண்ட காலமாக கட்டமைக்கப்படுகிறது. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் சினிமா இருக்கிறது. ஆனால் நடிகனை யாரும் நாடாள அழைப்பதில்லை என சீமான் கூறியுள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பு வழங்குவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியளித்துள்ளார்.
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்து களம் காண்கிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான், தொடர்ந்து திருத்தணியில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அந்த தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான நாகம்மாளுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு புரட்சிக்கர அரசியல் மாறுதலுக்காக 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நாட்டில் நெருங்காலமாக உரிமை,உடமை, உயிரை இழந்து ஒரு எளிய நிலையில் இருக்கும் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கு கடைசியாக இருக்கும் வாய்ப்பு அரசியல் விடுதலை தான்.
அதற்கு இருக்கும் ஒரு வாய்ப்பு தேர்தல் களம். அதனால் 2016 தொடங்கி 2026 வரை 10 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். ஒரு ஆகச்சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது எங்களின் பெரும் கனவாகும். அதனை கருத்தாக கொண்டு சேர்க்க முடிவு செய்தபோது அது சரியாக சென்று சேரவில்லை. தமிழ்நாட்டில் நாம் ஏற்றுக்கொண்ட பொருளாதாரம், நாடு ஏற்றுக் கொண்டிருப்பது சந்தைமயம். இதில் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் ஆகும். தனியார் மயமாகி விட்டால் நாடு சந்தையாகி விடும்.
மக்களும் விற்பனை பண்டமாகி விடுவார்கள். அரசு தரமாக ஒன்றை கொடுத்து விட்டால் தனியார் முதலாளி பாதிக்கப்படுவார்கள். முதலாளிகளுக்கான அரசியல், அதிகாரம் தான் நீண்ட காலமாக கட்டமைக்கப்படுகிறது. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் சினிமா இருக்கிறது. ஆனால் நடிகனை யாரும் நாடாள அழைப்பதில்லை. மேக்கப்பை கலைத்த உடனேயே அதிகாரத்தை தர வேண்டும் என சொல்கிறார்கள் என சீமான் தெரிவித்தார்.
அப்போது கீழே நின்றிருந்த பெண்கள் இருவர் சீமானிடம் சரமாரியாக முறையிட்டனர். எங்கள் வாக்குகளை நாங்கள் உங்களுக்கே போடுகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் 2 வயசு குழந்தைக்குகூட பாதுகாப்பில்லை. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் பேசவே இல்லை என கேள்விகளை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்திய சீமான் நான் ஆட்சிக்கு வந்ததும் இதையெல்லாம் செய்வேன். 100 சதவிகிதம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன். இல்லாவிட்டால் நடுத்தெருவில் வைத்து கேள்வி கேளுங்கள் என உறுதியளித்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.




















