MK Stalin: ஒழுங்கா வேலை பாக்க மாட்டேங்குறீங்களா! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் தரப்போகும் அதிர்ச்சி
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக-வின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை நிர்வாகிகளை மாற்ற மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
அதிருப்தியில் மு.க.ஸ்டாலின்:
தேர்தல் முடிவு வரும் இடைவெளியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த தேர்தலில் திமுக நிர்வாகிகள் பலரது செயல்பாடும் கட்சித் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சித் தலைமைக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது.
இந்த முறை அதிமுக மட்டுமின்றி நடிகர் விஜய்யின் தவெக விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது. இதனால், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணியாற்ற கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் கட்சித்தலைமை அதிரடி உத்தரவிட்டது.
காரணம் என்ன?
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பலரும் புதுமுகங்கள் ஆவார்கள். குறிப்பாக, உதயநிதி ஆதரவாளர்கள் பலருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தாங்கள் விரும்பிய வேட்பாளர்கள் பலருக்கும் கட்சித் தலைமை வாய்ப்பு வழங்காததால் அமைச்சர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் பலரும் வேட்பாளர்கள் பலருக்கும் தேர்தல் தருணத்தில் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடைசி கட்ட பரப்புரைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திமுக-வின் கோட்டை என்று கருதப்படும் சென்னையிலே பல தொகுதிகளில் கட்சியின் நிர்வாகிகள் அலட்சியமாக பணியாற்றியதாக புகார்கள் எழுந்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக போட்டியிட்ட ஆர்டி சேகருக்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உதயநிதிக்குச் சென்றது. பின்னர், ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று உதயநிதி அதை சரி செய்தார்.
இந்த சூழலில், தேர்தலின் முடிவுகளில் திமுக-விற்கு எதிராக ஏதேனும் அமைந்தாலும், திமுக எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காவிட்டாலும் கட்சியின் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை நிர்வாகிகளை அதிரடியாக மாற்ற மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால், பல இடங்களில் வேட்பாளர்கள் பலருக்கும் மூத்த நிர்வாகிகள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை பலரும் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு சென்றுள்ளது.
கட்சியில் காத்திருக்கும் மாற்றம்:
இதனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக-வின் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திமுக மட்டுமின்றி தேர்தல் பணிகளை முறையாக செய்யாத நிர்வாகிள் மீது மற்ற கட்சியினரும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















