மயிலாடுதுறையில் ‘கை’ நழுவுகிறதா கோட்டை? - திமுக vs காங்கிரஸ்: ‘மல்லுக்கட்டும்’ கூட்டணிக் கட்சிகள்!
ஒரு நபருக்கு ஒரு பதவி" என்ற அடிப்படையில், மயிலாடுதுறை தொகுதிப் போட்டியிட வாய்ப்பு பெற தனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜகுமார் விட்டுக்கொடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு என அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், டெல்டா மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான மயிலாடுதுறையில் ஆளுங்கட்சியான திமுக-விற்கும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் ‘மல்யுத்தம்’ தொடங்கிவிட்டது.
திமுகவின் ‘கிட்டப்பா’ கோட்டை முதல் காங்கிரஸ் ஆதிக்கம் வரை!
மயிலாடுதுறை தொகுதியின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இது திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் சரிசமமான பலப்பரீட்சைக் களமாகவே இருந்து வந்துள்ளது. 1967 முதல் 1984 வரை திமுகவின் மூத்த தலைவர் கிட்டப்பா அவர்கள் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று சாதனை படைத்த மண் இது. இதுவரை திமுக இங்கு 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றிக்கனியைப் பறித்துள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ராஜகுமார், பாமக வேட்பாளரை 2,742 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ ஆனார். இதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இத்தொகுதியை காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாகச் சித்திரிக்கிறது.
உட்கட்சி பூசல்: அதிருப்தியில் திமுக!
வெளியே கூட்டணி தர்மம் பேசினாலும், உள்ளூர் அளவில் திமுக - காங்கிரஸ் இடையே நிலவும் மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. "எங்கள் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, எங்களையே மதிக்கவில்லை" என்பதுதான் திமுக தொண்டர்களின் பிரதானக் குற்றச்சாட்டாக உள்ளது.
சமீபகாலமாக மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவருக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமாருக்கும் இடையே பொதுவெளியிலேயே மோதல்கள் வெடித்தன. "திமுக இல்லையென்றால் காங்கிரசுக்கு ஏது ஓட்டு? எங்களால் தான் நீங்கள் எம்.எல்.ஏ ஆனீர்கள்" என திமுகவினர் பகிரங்கமாகவே சீறுவது, கூட்டணியின் விரிசலை அம்பலப்படுத்தியுள்ளது. "எத்தனை காலம்தான் கூட்டணிக் கட்சிக்காக நாங்கள் வேலை செய்வது? சொந்தக் கட்சி வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே நாங்கள் களப்பணியாற்றுவோம்" என திமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பதவித் தியாகம் செய்த ராஜகுமார்
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், சிட்டிங் எம்.எல்.ஏ ராஜகுமார் மீண்டும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் ஒரு படி மேலே போய், காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுப்படி தனது மாவட்டத் தலைவர் பதவியைக் கூட விட்டுக் கொடுத்துள்ளார். "எம்.எல்.ஏ சீட் வேண்டுமென்றால் மாவட்டத் தலைவர் பதவியைத் துறக்க வேண்டும்" என்ற நிபந்தனையை ஏற்று, புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொகுதியைத் தக்கவைக்க அவர் மேற்கொண்டுள்ள ஒரு பெரும் 'ரிஸ்க்' ஆகப் பார்க்கப்படுகிறது.
கூட்டணி மாறுகிறதா? தவெக-வின் என்ட்ரி!
மயிலாடுதுறையில் திமுக பிடிவாதம் காட்டினால், அது கூட்டணியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை திமுக இத்தொகுதியை விட்டுக் கொடுக்காத பட்சத்தில், காங்கிரஸ் மாற்றுத் திட்டங்களை யோசிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இம்முறை களம் காண்பதால், காங்கிரஸுக்கும் தவெக-விற்கும் இடையே புதிய கூட்டணி உருவானால் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸுக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சூழல் அமைந்தால், டெல்டா அரசியலில் அது ஒரு மாபெரும் திருப்பமாக அமையும்.
முடிவு யாரிடம்?
திமுகவின் உள்ளூர் செல்வாக்கை நம்பித்தான் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது என்ற பிம்பத்தை உடைக்க திமுக தொண்டர்கள் துடிக்கிறார்கள். மறுபுறம், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைச் சுட்டிக்காட்டி 'கை' சின்னமே வெற்றிக் குறியீடு என்கிறது காங்கிரஸ்.
மயிலாடுதுறை தொகுதி, மீண்டும் ‘கை’வசம் இருக்குமா அல்லது ‘உதயசூரியன்’ அங்கு நேரிடையாக உதிக்குமா என்பது திமுக தலைமை எடுக்கும் முடிவிலேயே உள்ளது. ஒருவேளை அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால், அது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக முடிந்துவிடும் என்ற அச்சமும் ஒருபுறம் நிலவுகிறது.






















