ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்க வேண்டும்: சுயேட்சை வேட்பாளரின் பரபரப்பு பூஜை!
பூஜை செய்ய கோயிலுக்கு சென்றபோது சமூக ஆர்வலர் சங்கரபாண்டிக்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது, பின்னர் போலீஸ் அனுமதியுடன் பூஜை செய்தார்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்க வேண்டும் - பரபரப்பை கிளிப்பிய சுயேட்சை வேட்பாளர்.
பரபரப்பை கிளப்பிய வடக்கு சட்ட மன்ற தொகுதி
கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.10 சட்ட மன்ற தொகுதிகளை கொண்ட மதுரை மாவட்டத்தில் மேலூரைத் தவிர மற்ற இடங்களில் வேட்பாளர் அறிமுகம் செய்துவிட்டு பிரச்சாரத்தை திமுக கூட்டணி தொடங்கிவிட்டது. அதே போல் NDA கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் களம் காண்கிறார். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக களம் நிறுத்தியுள்ளது, ஸ்வார்சியத்தை கிளப்பியுள்ளது. அதே போல் அமைச்சர் மூர்த்தி மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மேற்கு தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் சட்ட மன்ற தொகுதியிலும், திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் பரபரப்பை கிளப்பும் வகையில் சுயேட்சை வேட்பாளர் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்க வேண்டும்
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்க வேண்டும் என நூதன முறையில் சிறப்பு பூஜை நடத்தியது பரப்பை கிளப்பியுள்ளது. மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கரபாண்டி. இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்துவரும் சூழலில், தனது வருமானத்தில் ஒரு பகுதியை சேகரித்து சமூகப் பணிகள் செய்து வருகிறார். ஆளும் கட்சிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தைரியமாக எதிர்க்கக் கூடியவர். தனது சட்ட மன்ற தொகுதியில் எங்கு பிரச்னை நடந்தாலும் நேரடியாக சென்று முகநூலில் லைவ் செய்து வெளிக் கொண்டுவருவார். சாக்கடை பிரச்னைகளுக்கு பல்வேறு நூதன போராட்டங்கள் செய்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
ரத்த வாந்தி எடுத்து தேர்தலில் தோல்வி அடைய வேண்டும்
இதனால் மாநகராட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல் என ஏகப்பட்ட தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தற்போது இரண்டாவது முறையாக சட்ட மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன் வெளியியிட்ட போஸ்டர் பரபரப்பை கிளப்பியது. அதில்..” தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளாகளுக்கு வாக்களிக்க பணம் முறைகேடாக வழங்கி ஜனநாயக படுகொலை செய்யும், ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுத்து தேர்தலில் தோல்வி அடைய வேண்டும். மேலும், தமிழகத்தில் நடைபெற இருக்கும் MLAதேர்தல் ஐனநாயக முறைப்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலோடு மதுரை தத்தனேரி சுடுகாட்டு காளியிடம் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும்”. என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பூஜை செய்ய கோயிலுக்கு சென்றபோது சமூக ஆர்வலர் சங்கரபாண்டிக்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து போலீஸ் அனுமதியுடன் மயான காளி கோயிலில் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்தார்.
ஏன் எனக்கு வாக்கு செலுத்த வேண்டும்
தொடர்ந்து அவர் நம்மிடம் கூறுகையில்...,” நான் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை விசயங்களை செய்து கொடுப்பேன். தேர்தலுக்கு பணம் கொடுக்காத நான், தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் லஞ்சம் வாங்காமல் பணி செய்வேன். எனவே மதுரை வடக்கு தொகுதி மக்கள் எனக்கு வாங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.




















