மேலும் அறிய
Local body election| அதிமுகவுக்கு தெம்பு இருந்தால் சட்டசபையை முடக்கி பார்க்கட்டும் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பரப்புரை செய்தார்

உதய நிதி ஸ்டாலின் பரப்புரையின்போது
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் போது கொரோனாவின் 2-வது அலை பரவி ஆபத்தான நிலையில் தமிழகம் இருந்தது. பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா வார்டுக்கு உள்ளேயே சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஓராண்டில் ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 9 மாதங்களில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டது. இதனால் கொரோனாவின் 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அதன்மூலம் இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது அரசு கஜானா காலியாக இருந்தது. அதோடு ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்தது. எனினும் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி கொரோனா நிவாரண தொகை, பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, மற்றும் பெட்ரோல் விலையில் முதல்கட்டமாக ரூ.3 குறைப்பு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து விரைவில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால் இல்லம் தேடி கல்வி திட்டம், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரத்துக்குள் இலவச சிகிச்சை உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக சட்டசபையை முடக்க போவதாக கூறுகிறார். சட்டசபையை முடக்கினால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். அ.தி.மு.க.வுக்கு தெம்பு இருந்தால் சட்டசபையை முடக்கி பார்க்கட்டும். அதன்பின்னர் தேர்தல் நடைபெற்றால் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும். அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது.
நான் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். ஆனால் என்னை காணவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எங்கள் வீட்டில் கூட இப்படி தேடவில்லை. சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றும்போது அவருக்கு எதிரேதான் அமர்ந்து இருந்தேன். அவர் மேஜைக்கு மேலே பார்த்து இருந்தால் என்னை பார்த்து இருக்கலாம்.

மதுரையில் ஒரு செங்கலை மட்டும் வைத்து விட்டு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்ததாக பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் கூறின. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல்லை மாநகராட்சியாக அறிவித்து ஒரு பலகையை மட்டும் வைத்தனர். ஆனால் மாநகராட்சிக்கான கட்டமைப்பு வசதிகள் எதையும் செய்யவில்லை. இதனால் கிராமம் போன்று திண்டுக்கல் மாநகராட்சி உள்ளது. திண்டுக்கல்லின் முதல் பெண் மேயர் பதவி தி.மு.க.வுக்கு கிடைத்ததும் அகலமான சாலைகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும். இதற்கு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion


















