Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
திராவிடக் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு எவ்விதச் சங்கோஜமும் இல்லை. முதல்வர் ஸ்டாலினிடம் கலைஞர் அவர்களின் புன்னகையின் சாயலைக் காண்கிறேன் என கமல் பேசினார்

திமுகவில் சேர சொல்லி கலைஞர் சொன்னார், எனக்கு 10 சீட் கொடுத்திருந்தாலும் திட்ட மாட்டேன், எதிர்க்கட்சியாக நான் யாரையும் பார்க்கவில்லை என சேலம் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளாற்
எதிர்காலத்திற்கான அரசியல் வருகை
பொதுக்கூட்டத்தில் கமல் பேசியதாவது இன்றைய சூழலில் நிலவும் போலி அரசியலுக்கும், மக்கள் நலன் சாராத போக்குகளுக்கும் எதிராக, எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வரப்போகும் அநீதிகளைத் தடுக்கும் நோக்கில் நான் இங்கு வந்துள்ளேன். தேர்தலை விட தமிழகத்தின் எதிர்காலமே முக்கியம் என்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்தை நான் முழுமையாக வழிமொழிகிறேன்.
இடஒதுக்கீடு மற்றும் தொகுதி சீரமைப்பு
தற்போது முன்வைக்கப்படும் 33 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு கவர்ச்சிகரமான தூண்டில்; அந்தத் தூண்டிலில் நாங்கள் சிக்க மாட்டோம். அதேபோல், தொகுதி சீரமைப்பு விவகாரத்தை தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் எனத் தள்ளிப்போடாமல், இப்போதே விவாதிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
திராவிடக் குடும்பத்தில் ஒருவனாக...
திராவிடக் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு எவ்விதச் சங்கோஜமும் இல்லை. முதல்வர் ஸ்டாலினிடம் கலைஞர் அவர்களின் புன்னகையின் சாயலைக் காண்கிறேன். திராவிடப் பல்லக்கைச் சுமக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளதை பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்கு பதவிக்காகவோ அல்லது அமரும் இருக்கைக்காகவோ வரவில்லை; தமிழகத்திற்காகப் பதற வேண்டிய நேரம் இது.
கல்வி அறிவில் தமிழகத்தின் முன்னோடித் திட்டம்
33 விழுக்காடு எனும் தூண்டில் பற்றி இங்குள்ளவர்களுக்குப் புரிய வைத்து விடலாம். ஆனால் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்த அளவு கல்வியறிவு கிடையாது. இந்தியாவிலேயே 33 சதவீதத்திற்கும் மேலாகப் பெண்கள் உயர்கல்வி கற்பது தமிழ்நாட்டில்தான். மற்ற மாநிலங்களுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுக்கும் பொறுப்பு தமிழகத்திற்கு உண்டு. பல்வேறு துறைகளில் நாம் முன்னிலை வகிக்கிறோம் என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் கசப்புடன் இருந்தாலும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
விமர்சனமும் அங்கீகாரமும்
யாரையும் திட்டுவதற்காக நான் இங்கு வரவில்லை. எனக்கு 10 தொகுதிகள் கொடுத்திருந்தாலும் நான் யாரையும் விமர்சித்திருக்க மாட்டேன். இங்கு எவரையும் நான் எதிர்க்கட்சியாகப் பார்க்கவில்லை. முன்பு நாங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஏற்று, அவற்றை முதல்வர் நடைமுறைப்படுத்திய காரணத்திற்காகவே நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அன்றே திமுகவில் சேரச் சொல்லி கலைஞர் அவர்கள் என்னை அழைத்தார்; இன்று அந்தப் பெரிய குடும்பத்தில் ஒரு அங்கமாக இணைந்துவிட்டேன்.
70 காலப் பாரம்பரியம்
ஒரு கூட்டத்தை எவ்வளவு கட்டுப்பாட்டுடன், விபத்துகளின்றி நடத்த வேண்டும் என்பதற்கு திமுகவே முன்னுதாரணம். மக்களைச் சரியாக வழிநடத்தி, அவர்களின் நன்மதிப்பைப் பெற்றால் வாக்குகள் தானாக வரும். வெறும் கூட்டங்கள் மட்டுமே குடும்பமாகி விட முடியாது; அவை கலைந்துவிடும். ஆனால், இது 70 ஆண்டுகளாகக் கட்டிக்காக்கப்பட்ட வலிமையான குடும்பம். எனது இந்தப் பேச்சு இன்றைய தற்காலிக அரசியலுக்கானது மட்டுமல்ல, இது தமிழகத்தின் நிரந்தர நலனுக்கானது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















