’’தர்மபுரியை திட்டமிட்டு புறக்கணித்த திமுக; அடிப்படை வசதியே இல்லை’’- செளமியா அன்புமணி வேதனை
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஜெ. ஆட்சி; ஈபிஎஸ்ஸும் அதே ஆட்சியை கொடுப்பார்: தர்மபுரியில் செளமியா அன்புமணி வாக்குறுதி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதேபோன்ற ஆட்சியை இபிஎஸ் கொடுப்பார். தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையான தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்- சௌமியா அன்புமணி பிரச்சாரம்.
தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளராக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி களம் இறங்கி உள்ளார். அவர் இன்று தன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கே, மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
தர்மபுரியை திட்டமிட்டுப் புறக்கணித்த திமுக
அப்போது கூடியிருந்த மக்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, ’’திமுக அரசாங்கம் தர்மபுரியை திட்டமிட்டுப் புறக்கணித்து விட்டது. அதன் காரணமாக இங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் பல கிராமங்களில் குடி தண்ணீர் பிரச்சனை இன்றும் இருக்கிறது.
படித்த இளைஞர்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவர்களுக்குத் தேவையான வேலை வாய்ப்புகளைக் கொடுப்பதற்கு உரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.
அதிமுக ஆட்சியில் தொழிற்சாலைகள்
அடுத்து அதிமுக ஆட்சி அமைந்ததும் தர்மபுரிக்கு மாம்பழக் கூழ் தொழிற்சாலை, தக்காளிச் சாறு தொழிற்சாலை, குளிர் பதனிடத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
அதிகரித்த போதை கலாச்சாரம்
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் மது போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. அதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று, ஜெயலலிதா போன்று பாதுகாப்பான ஆட்சியை கொடுப்பார்.
மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு
தர்மபுரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ். எனவே நீங்கள் மீண்டும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து எங்களை வெற்றி பெறச் செய்தால் இந்த மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர பாடுபடுவோம்’’ என்று செளமியா அன்புமணி தெரிவித்தார்.





















