திருமாவளவனை அவமதித்த பிரேமலதா - முதல்வர் ஸ்டாலின் மேடையில் இருந்தபோதே நடந்த சம்பவம் - கடலூரில் நடந்தது என்ன?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவமதித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா

கடலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா அவமதித்ததாக சொல்லப்படுகிறது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் 9 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களையும் கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அறிமுகம் செய்தார். அப்போது தொகுதி வாரியாக வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய நிலையில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர்.
ஆனால், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விருதாச்சலம் தொகுதியில் அம்மையார் பிரேமலதா போட்டியிடுகிறார் என திருமாவளவன் கூறிய நிலையில் எழுந்து நிற்காமல் சிரித்தபடி அமர்ந்திருந்தார். அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் பெயரை அறிவித்த போது எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர்.
எழுந்திருக்காதது ஏன்?
வேட்பாளர் அறிமுகம் செய்யும்போது மேடையில் எழுந்து நின்று வணக்கம் வைப்பது தான் வாடிக்கையான ஒன்று, திமுக தலைவர் பிரேமலதா பேரை சொல்லும் போது எழுந்து நின்ற அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சொன்னபோது எழுந்திருக்காதது ஏன்?
ஒரு கட்சியின் தலைவர் என்று பார்க்காமல் அவர் அமர்ந்திருந்ததால் திருமாவளவன் அவமதிப்பு செய்ததாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
சமூக நீதிக் கூட்டணி என அதே மேடையில் பேசிய திருமாவளவனுக்கு அவமதிப்பு நடந்திருக்கும் சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே, திமுக கூட்டணியில் தேமுதிக வந்ததால்தான் மற்ற கூட்டணிக்கு சீட்கள் பிரித்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. திமுகவுடன் கூட்டணி வைத்து அதிக தேர்தல்களை சந்தித்த கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் கறார் காட்டிய திமுக, முதல்முறையாக கூட்டணி சேர்ந்த உடனே தேமுதிகவுக்கு 10 சீட்கள் கொடுக்கப்பட்டது அரசியலில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் என்னவென்று எல்லாம் அரசியல் விமர்சகர்கள் கேட்டனர். இப்படி எல்லாம் இருக்கும் சூழலில், தமிழ்நாட்டின் முக்கிய கட்சி தலைவரை அவமதித்திருப்பது பிரேமலதாவுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.




















