’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
இபிஎஸ் மீது தனிநபர் தாக்குதல் நடத்தி விமர்சனம் செய்தால், நாங்களும் முதலமைச்சரை, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வோம்- கும்பகோணத்தில் பாமக தலைவர் அன்புமணி

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் வன்கொடுமைகள் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்து விட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி கும்பகோணத்தை தனி மாவட்டமாக பிரிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள சுவாமி மலையில் பாமக தலைவர் அன்புமணி கட்சியினரோடு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியார்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர்,
’’தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத மோசமான திமுக ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
குழந்தைகளுக்கே பாலியல் வன்கொடுமை
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இப்படி ஒரு சூழல் இருந்தது கிடையாது.
தமிழ்நாட்டை எத்தனையோ தலைவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். நானும் டெல்டா காரன்தான் என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார்.. இதுதான் உலகத்திலே மிகச்சிறந்த நகைச்சுவையாக நான் பார்க்கிறேன்.
டெல்டாவில் விவசாயிகள் மிகவும் மோசமான கஷ்டமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திற்கு ஏற்ப ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
முதலமைச்சரை ஒரு பொம்மை போல வைத்துக் கொண்டு அவரை சுற்றி நான்கு பேர் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பிரச்சனை என்னவென்று தெரியவில்லை. அவரைச் சுற்றி உள்ள நான்கு வியாபாரிகள், பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவுக்கு எதிரான அலை
தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இபிஎஸ் வருவார்.
2021 தேர்தலுக்கு முன்பு இதே கும்பகோணம் மண்ணில் வைத்து 20 முறைக்கு மேல் முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். நான் ஆட்சிக்கு வந்தவுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணம் மாவட்டத்தை தனியாக பிரிப்பேன் என்று சொன்னார், ஆனால் ஐந்து ஆண்டு காலத்தில் அதனை செய்யவில்லை.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆறு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் ஒரே ஒரு மாவட்டத்தை கூட பிரிக்கவில்லை. மக்கள், சேவைகளை பெறுவதற்கு கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வரை பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
திமுக கொடுப்பது எட்டாயிரம் ரூபாய் போலி கூப்பன்; மக்களை முட்டாளாக்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் கூப்பனை கொடுத்து ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
விவசாயிகளின் கஷ்டம் தெரியாது
இபிஎஸ் அடிப்படையில் ஒரு விவசாயி, அதனால் விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்தவர். ஆனால் ஸ்டாலினுக்கு விவசாயிகளின் கஷ்டம் பற்றி எதுவும் தெரியாது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஏன் எங்களுக்கே முதலமைச்சர் பற்றி பேச முடியாதா? திமுகவை பற்றி, அவர்களின் குடும்பத்தை பற்றி பேச தெரியாதா? பேசினால் அது தரம் தாழ்ந்து போகும் என்பதனால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்




















