CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு சில அதிகாரிகள் கட்டுப்பட மறுப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே தமிழ்நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை விஜய் அரசு மேற்கொண்டு வருகிறது.
அமைச்சரவையில் புதியவர்கள்:
தவெக அமைச்சரவையில் செங்கோட்டையன் தவிர மற்ற அனைவருக்கும் இதுவே அமைச்சரவையில் இதுவே முதன்முறை ஆகும். மேலும், தவெக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர்களில் செங்கோட்டையன், விஎஸ் பாபு தவிர மற்ற அனைவரும் தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராவது இதுவே முதன்முறை ஆகும்.
அனைவரும் புதியவர்கள், அமைச்சர்களும் புதியவர்கள் என்பதால் பல துறைகளில் அதிகாரிகள் அமைச்சர்களின் பேச்சுக்கு கட்டுப்பட மறுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. லஞ்சம், ஊழலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று விஜய் திட்டவட்டமாக இருக்கும் சூழலில், அமைச்சர்களுக்கும் மிகவும் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்:
இந்த சூழலில், அமைச்சர்களின் காதுகளுக்கு எட்டாத வகையில் பல துறைகளிலும் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை காட்ட முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில துறைகளில் அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட மறுத்து சில செயலாளர்கள் செயல்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதன் எதிரொலியாகவே தமிழ்நாடு முழுவதும் பல முக்கிய துறைகளின் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
குறிப்பாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹு ஆகியோரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில், பல மட்டங்களில் அரசு அதிகாரிகள் பலரும் திறம்பட செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், சில அரசு அதிகாரிகள் அமைச்சர்களின் பேச்சுக்கு கட்டுப்பட மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பீதியில் அதிகாரிகள்:
இதனால், அரசின் நடவடிக்கைக்கும், உத்தரவிற்கும் கட்டுப்பட மறுக்கும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டும் வருகிறது. தமிழ்நாட்டில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு பல இடங்களில் அரசு அதிகாரிகள் பலரும் சற்று பீதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக ஆட்சியில் அந்த கட்சியைச் சேர்ந்த வீராசாமி எனும் நிர்வாகி லஞ்சம் வாங்கிய வழக்கில் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அவரை கைது செய்தனர் காவல்துறை. வீராசாமியை கைது செய்த விவகாரத்தில் அவரை ஜாமினில் விடுவித்துவிடுவார்கள் என்றே பலரும் கருதிய நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
சொந்த கட்சிக்காரருக்கே சிறை என்ற சூழலில், அரசு அதிகாரிகளாக இருந்தாலும் லஞ்சம், பணியில் அலட்சியமாக இருந்தால் அதற்கான தக்க தண்டனை வழங்கவும் விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், புதியவர்கள் ஆட்சியில் கொடி கட்டிப்பறக்கலாம் என்று கருதிய பல அதிகாரிகள் தற்போது பீதியாகியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















