West Bengal Election 2026: மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஓட்டு விழவே கூடாது.. பட்டனில் டேப் ஒட்டிய வினோதம்!
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 93 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு மிஷினில் பாஜகவுக்கான பட்டனில் டேப் போட்டு ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஒன்றரை மாத காலமாக நடைபெற்ற தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து விட்டது. அதேசமயம் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 93 சதவிகித வாக்குகள் பதிவானது.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 7 மாவட்டங்களில் உள்ள 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்த 1,448 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வாக்குப்பதிவு முறைகேடு நடந்திருப்பதாக புகார்
இதனிடையே மேற்கு வங்க இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் திரிணாமூல் கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் ஃபால்டாவில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டைமண்ட் ஹார்பர் மக்களவை எம்.பி.யும், முதலமைச்சர் மமதா பானர்ஜி மருமகனுமான அபிஷேக் பானர்ஜி கோட்டையாக உள்ளது.
அங்குள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது பொத்தான் டேப் ஒட்டப்பட்டிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பாஜக பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.
பாஜக புகார் - திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு
அங்கு பாஜக தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடைவதால் இப்படியான குற்றச்சாட்டை முன்வைப்பதாக தெரிவித்துள்ளது. பல வாக்குச்சாவடிகளில், பாஜகவுக்கு வாக்களிக்கும் பட்டன் டேப் போட்டு ஒட்டப்பட்டிருக்கிறது. இதனால் வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாமல் தடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளால் டயமண்ட் ஹார்பர் பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றச்சாட்டின் உண்மை தன்மையை ஆராய்ந்து வருகின்றனர். ஒருவேளை புகார் உண்மையாகும் பட்சத்தில் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதேபோல் பூர்பா பர்தமானில் உள்ள மாண்டேஸ்வர் சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடி எண் 35ல் இதுபோன்ற டேப்பால் வாக்குப்பதிவு இயந்திர பட்டன் ஒட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















