டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
நனவாகும் அரசுப் பணி; டிஎன்பிஎஸ்சி மூலம் காலியிடங்கள் நிரப்பல்- பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி மூலம் காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பட்ஜெட் தொடரில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வோர் அரசும் தனது தேர்தல் வாக்குறுதிகளில் காலி இடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்பதும் ஆனால் கடைசியில் சொற்ப இடங்களே நிரப்பப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை
இந்த நிலையில் தவெக அரசு முதல்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இதற்கிடையே காலி இடங்களை விரைந்து நிரப்புவது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தினாலும், எந்தெந்த துறைகளில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற தரவுகளை அந்தந்த அரசுத் துறைகள்தான் தேர்வாணையத்திடம் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளைத் துரிதப்படுத்துவது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு தமிழ்நாடு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது துறை சார்ந்த விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.
தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
அரசுத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் அலுவலகம் நேரடியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளதால், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அப்போது, அரசுப் பணிகளுக்கான கூடுதல் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























