நெருங்கும் தேர்தல்; தேர்வு தேதிகளில் மாற்றம்? அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை- எப்போது?
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: முக்கிய ஆலோசனை கூட்டம்! தேதிகள் மாறுமா? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த மாதம் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் ஆலோசனை
பிப்ரவரி 16ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள உத்தரவில், மார்ச்/ ஏப்ரல் 2026-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் அனைத்து இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் / அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி/ இடைநிலை/ தனியார் பள்ளிகள்) மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான ஆய்வு அலுவலர் கூட்டம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டம் ஆகியவை நடைபெற உள்ளது.
ஆய்வுக் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நாள்
தேவநேயப் பாவாணர் மாவட்டமைய நூலக அரங்கம், 175, அண்ணாசாலை, சென்னை-02.
16.02.2026 (திங்கட் கிழமை), முற்பகல் 09.00 மணி.
கலந்து கொள்ள வேண்டிய அலுவலர்கள் விவரம்
அனைத்து இணை இயக்குநர்கள் / மாவட்ட முதன்மைக் மாவட்டக் கல்வி கல்வி அலுவலர்கள்/அலுவலர்கள் (இடைநிலை, தனியார் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி) மற்றும் அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள்.
எதற்காக ஆலோசனைக் கூட்டம்?
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பொதுத்தேர்வுகள் குறித்த அறிவுரை வழங்குதல்.
பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள்:
(1) விடைத்தாட்கள் பாதுகாப்பு.
(2) வழித்தடம் திட்டமிடுதல்.
(3) வழித்தட அலுவலருக்கான வாகன வசதி / ஆயுதம் ஏந்திய காவலர் ஏற்பாடு செய்தல்.
(4) தேர்வு மையங்களில் உள்ள வசதிகள்.
(5) வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் -பாதுகாப்பு ஏற்பாடுகள்.
(6) மாவட்ட அளவிலான கூட்டம்:
(i) மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டம்.
(ii) கண்காணிப்பு அலுவலர் கூட்டம்.
(7) தேர்வு மைய பாதுகாப்பு ஏற்பாடுகள்.
மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து.
(i) சொல்வதை எழுதுபவர்- புதிய நடைமுறை குறித்த ஏற்பாடுகள்..
(ii) சொல்வதை எழுதுபவர் பணி மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் பயிற்சி.
(iii) திருப்புதல் தேர்வில் சொல்வதை எழுதுபவர் பணிக்காண ஏற்பாடுகள்.
தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் விவாதித்தல்
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பிற வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் அல்லது 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தேதிகளில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
























