TN 12th Result 2025: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவர்...! யார் தெரியுமா?
Tamil Nadu 12th Result 2025 Updates: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளானது இன்று வெளியானது. மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மார்ச் 3 -ஆம் தேதி முதல் 25 வரை தேர்வுகள் நடந்தது. தொடர்ந்து மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 4 -ஆம் தேதி தொடங்கி 17 -ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன.
தேர்வு முடிவுகள்
12 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், மே 8 -ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியது. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மாநில தேர்ச்சி விபரம்
12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 93.16 சதவிகிதமும் மாணவிகள் 96.70 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் மாற்றுத்திறனாளி மாணவர் முதலிடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கேவரோடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மோகன்தாஸ், சரளா தம்பதியினர். இவர்களுக்கு அரவிந்த், ஆனந்த் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அரவிந்த் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இளைய மகன் ஆனந்த் பார்வை குறைபாடு உள்ளவர் ஆவார்.

இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வை குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று வெளியான 12 வகுப்பு தேர்வில் தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். கணினி வழியில் தேர்வு எழுதிய இவர் 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் பார்வை குறைபாடு உடைய மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்க முன்வர வேண்டும் எனவும், ஆங்கில ஆசிரியர்களாகவும் அல்லது அப்ளிகேஷன் டெவலப்பராக விருப்பமும் என்றும் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் விபரம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் மாணவர்கள் 4 ஆயிரத்து 633 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 419 பேரும் என மொத்தம் 10 ஆயிரத்து 52 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 218 மாணவர்களும், 5 ஆயிரத்து 155 மாணவிகளும் என 9 ஆயிரத்து 373 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும், மாணவிகள் 96.70 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 33 வது இடத்தை பெற்றுள்ளது.

மாவட்ட அளவில் முதலிடம்
மயிலாடுதுறை மாவட்ட அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பயிலும் ஜெஸ்மியா என்ற மாணவி 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோன்று இரண்டாம் இடத்தையும் அதே பள்ளி மாணவி மதுஷா பிடித்துள்ளார். மாணவிகள் ஜெஸ்மியா மற்றும் மதுஷாவிக்கு பள்ளிக்கு வந்தனர். அவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.






















