TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 12th 2025 Answer Sheet Copy: மார்ச் 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் முதல் பெறலாம்.

2025ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, விடைத் தாள் நகல் இன்று (ஜூன் 4) பிற்பகல் முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதேபோல நாளை முதல் மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2025 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்:
மார்ச் 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 04.06.2025 (புதன்கிழமை) பிற்பகல் முதல் பெறலாம்.
எப்படி?
மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification-ஐ Click செய்தவுடன் HSE Second Year Exam, March 2025 - Scripts Download என்ற வாசகத்தினை “Click” செய்ய வேண்டும். அதில் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் ‘Application for Retotalling / Revaluation” என்ற தலைப்பை க்ளிக் செய்து, வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 05.06.2025 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் 07.06.2025 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505.
மறுகூட்டல்
உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/- என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.























