10th Exam Grace Mark: அடித்தது ஜாக்பாட்; 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்- எதற்கு? ஏன்?
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4ஆம் கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. 4ஆவது கேள்வியில் உள்ள 2 வாக்கியங்களும் முரணாக இருந்த காரணத்தால், 4ஆவது கேள்விக்கு பதில் கொடுத்து இருந்தாலே கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
முடிந்த பொதுத் தேர்வுகள்
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. தொடர்ந்து ஏப்ரல் 15ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு முடிந்தது.
இதில் 12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 19ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 21ஆம் தேதி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, விடுமுறை அளிக்கப்பட்டது.
ஏப்ரல் 30ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம்
தொடர்ந்து 10, 11ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று (ஏப்ரல் 21) தொடங்கியது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்த திருத்துதல் பணி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பணிகளில் சுமார் 95 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4ஆம் கேள்வியில் 2 வாக்கியங்களும் முரணாக இருந்த காரணத்தால், 4ஆவது கேள்விக்கு பதில் கொடுத்து இருந்தால் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை
முன்னதாக 4ஆவது கேள்வியில் உள்ள வாக்கியங்கள் முரணாக உள்ள நிலையில், மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

