School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen in Tamilnadu: பள்ளிகளில் மாணவர்களை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்- பாமக.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பமும் அனல் காற்றும் தொடர்வதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக (ராமதாஸ் அணி) செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, நாளை (ஜூன் 4 ஆம் தேதி) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகின்றது, இந்த நடவடிக்கையை வரவேற்கும் அதே நேரத்தில், தற்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பமும் அனல் காற்றும் தொடர்வதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மாணவர்களுக்கு நீரிழப்பு, தலைச்சுற்றல், மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் உடல்நிலை மாற்றங்களை உடனடியாகக் கண்டறிந்து தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
போதிய வசதிகள் அவசியம்
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் போதுமான அளவில் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் அருந்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் நிழல் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, காலை வழிபாடு மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் மற்றும் வீடு திரும்பும் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் முதலுதவி பெட்டிகள், அவசர மருத்துவ உதவி எண்கள் மற்றும் தேவையான சுகாதார வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
மேலும், புதிய கல்வியாண்டு தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். எந்த மாணவரும் அடிப்படை கல்வி உபகரணங்கள் இன்றி வகுப்பறையில் அமர வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.
ஆரோக்கியமான கல்விச் சூழல் அவசியம்
எதிர்காலத் தமிழ்நாட்டை உருவாக்கப் போகும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மைக் கடமையாகும். எனவே, பள்ளிகள் திறக்கப்படும் முன்பே மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக்கல்வித் துறை உறுதி செய்து, மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலில் கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக பாமகவைச் சேர்ந்த ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















