பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
ஊதியப் பாதுகாப்பு முதல் பணி நிரவல் ரத்து வரை! பள்ளிக் கல்வித்துறைக்கு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகள்:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி நேரடி நியமனத்தில் சல்லும் போது ஊதிய இழப்பு ஏற்படாத வகையில் உரிய திருத்தங்கள் செய்து ஊதியப் பாதுகாப்புடன் (Pay protection) முதுகலை ஆசிரியர் பணியினை வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆசிரியர் கூட்டமைப்பு, மேலும் சில முக்கிய கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளது.
- மதிப்பெண் தளர்வு
பள்ளிக் கல்வித்துறை அரசாணை இன் படி கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களின் தளர்வு வழங்கப்பட்டது. பொதுப் பிரிவினர் தவிர அனைவருக்கும் மதிப்பெண்களில் 5 சதவீத தளர்வு வழங்கப்பட்டது. தற்போது நடைபெற உள்ள சிறப்புத் தகுதி தேர்வில் ஆசிரியர்களின் பணிக் காலம், கூடுதல் கல்வித்தகுதி
ஆகியவை கருத்தில் கொண்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை, தற்போது உச்ச நீதிமன்ற திர்ப்பால் மூத்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொதுப் பிரிவினர் உள்ளிட்ட அனைவருக்கும் மேலும் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
- பணி நிரவல் கலந்தாய்வினை ரத்து செய்திட வேண்டும்
2021ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறையில் பதவி உயர்வு நடைபெறாத நிலையில், கடந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் நடைபெற்றது, இந்த ஆண்டும் பதவி உயர்வு நடைபெறாததால் காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடைபெற உள்ளது பதவி உயர்வு நடைபெற்றால் ஆயிரக்கணக்கான பட்டதாரி காலி பணியிடங்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள பணி நிரவல் கலந்தாய்வினை ரத்து செய்திட வேண்டும்.
- போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும்
கடந்த ஆட்சி காலத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக ஆசிரியர்களுக்கு பின்வரும் நாட்களுக்குஊதியப் பிடித்தம் செய்யப்பட்டது. இந்தப் போராட்ட நாட்கள் உள்ளது. போராட்ட நாட்கள் முறைப்படுத்தப்படாத முறைப்படுத்தப்படாமல் காரணத்தினால் தேர்வு நிலை /சிறப்பு நிலை மற்றும் பதவி உயர்வுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் போராட்டம் சார்ந்து நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டங்கள் பணி வரன்முறை செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு 4.10.2018, 9.07.2025,9.72025 18.11.2025 ஆகிய வேலை நிறுத்த காலத்தில் ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டுள்ள போராட்ட காலத்தை முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும்.
- அரசாணை எண் 243 பாதிப்பு இன்றி தொடர ஆவண செய்ய வேண்டும்
தொடக்கக் கல்வித் துறையில், உயர்நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் எங்களின் நீண்ட கால கோரிக்கையின் படி வட்டார முன்னுரிமை ரத்து செய்யப்பட்டு மாநில முன்னுரிமையிலான அரசாணை எண் 243 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது காலத்தின் தேவையும் கட்டாயமும் ஆகும். இதனால் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் முன்னுரிமை பாதிப்பின்றி, இடமாறுதல் பெறவும் மாநில முழுவதும் ஒரே மாதிரியான பதவி உயர்வு வாய்ப்புகளும் பெற வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த அரசாணை எவ்வித பாதிப்பும் இன்றி தொடர ஆவண செய்ய வேண்டும்.
- பதவி உயர்வு நடைபெறும் வரை காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை நியமித்திட அனுமதி வழங்கிட வேண்டும்.
- பட்டதாரி ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளை ஆய்வு செய்யும் பள்ளிக் கல்வி துணை ஆய்வாளர் (DEPUTY INSPECTOR) மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்திட வேண்டும்.
இதையும் வாசிக்கலாம்: ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
- தொடக்கக் கல்வித் துறையில் துணை ஆய்வாளர் பணியிடங்கள ஏற்படுத்த வேண்டும் தொடக்கக் கல்வித் துறையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணி இடங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் துணை ஆய்வாளர் பணியிடங்களாக மாற்றி புதிய பணி இடங்களை ஏற்படுத்த கேட்டுக் கொள்கிறோம்.
- தொடக்கக் கல்வித் துறையில் 100% பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 239 படி தொடக்க கல்வித் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் 100 சதவீதமும் இடை நிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் எந்த துறைகளிலும் இதுபோன்ற 100 சதவீதம் பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை. கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக் கல்வித்துறையில் நேரடி பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. ஒன்றிய அளவில் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் முழுவதும் பதவி உயர்வின் மூலம் நிரப்பபடுவதால், பல ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலில் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது.எனவே. தொடக்கக்கல்வித்துறையில் 50 சதவீதம் பதவி உயர்வு 50 சதவீதம் நேரடி நியமனம் செய்திட வேண்டும்.
- கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
தற்போது கூடுதல் மாணவர்கள் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 175 மாணவர்கள் அல்லது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 35 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. 6,7,8 வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு மேல் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























