ஐஐடியில் 2 முறை தோல்வி.. ரூ.20,000 சம்பளம் டூ துபாயில் இளம் தொழிலதிபர்! செளரவ் உத்வேக கதை!
ஐஐடி நுழைவுத்தேர்வில் தோல்வியைத் தழுவி, வெறும் 20,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இன்று துபாயில் முன்னணி நிறுவனத்தின் பிசினஸ் லீடராக உயர்ந்து வியக்க வைத்துள்ளார்.

இந்தியாவில் ஐஐடி போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் சேர முடியாவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என விரக்தியடையும் மாணவர்களுக்கு மத்தியில், விடாமுயற்சியால் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் சௌரவ் ஜெயின்.
இரண்டு முறை ஐஐடி நுழைவுத்தேர்வில் தோல்வியைத் தழுவி, வெறும் 20,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இன்று துபாயில் முன்னணி நிறுவனத்தின் பிசினஸ் லீடராக உயர்ந்து வியக்க வைத்துள்ளார்.
தோல்வியும், தொடக்கமும்
பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த சௌரவ், பல இந்திய மாணவர்களைப் போலவே ஐஐடியில் சேர கடுமையாகப் படித்து ஜேஇஇ தேர்வை எழுதினார். ஆனால், தொடர்ந்து இரண்டு முறை அந்த நுழைவுத்தேர்வில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
இந்தத் தோல்வி அவரை மனதளவில் கடுமையாகப் பாதித்தது. எனினும், அந்த விரக்தியிலேயே முடங்கிவிடாமல், ஒரு சாதாரண டயர் 3 பொறியியல் கல்லூரியில் சேர்ந்து தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். ஐஐடி என்ற முத்திரை தன்னிடம் இல்லை என்றாலும், திறமையை வளர்ப்பதில் அவர் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். பணத்துக்கு கஷ்டம் ஏற்பட்ட போதும் ட்யூஷன் எடுத்துச் சமாளித்தார்.
முதல் பணியும், வளர்ச்சியும்
கல்லூரிப் படிப்பை முடித்ததும், அவர் ஒரு சாதாரண மென்பொருள் பொறியாளராக வெறும் ரூ.20,000 மாதச் சம்பளத்தில் தனது முதல் பணியைத் தொடங்கினார். ஆரம்பக்கட்ட சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும், தனது உழைப்பில் அவர் எவ்வித சமரசமும் செய்துகொள்ளவில்லை.
புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்வது மற்றும் அயராத உழைப்பு ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தில் படிப்படியாக தனது திறனை நிரூபித்தார். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இயந்தியக் கற்றல் ஆகியவற்றை தன்னிச்சையாகவே கற்றார். அவரது இந்த அர்ப்பணிப்பு அவரை கார்ப்பரேட் உலகில் வேகமாக முன்னேற்றியது.
ஒரு மேலாளரிடம் ஏஐ தொடர்பான புராஜெக்டைக் கேட்டுப் பெற்றார். அதில் அவர் பெற்ற வெற்றி, அடுத்தடுத்த நிலைக்கு அவரை உயர்த்தியது.
துபாயில் மாபெரும் வெற்றி
ரூ.20 ஆயிரத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய சௌரவ் ஜெயின், இன்று துபாயில் உள்ள ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் மிக முக்கிய வணிகப் பிரிவை (Business Portfolio) வழிநடத்தும் உயர்மட்டத் தலைவராக உருவெடுத்துள்ளார்.
நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது படிக்கும் கல்லூரி மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதை தனது வாழ்க்கையின் மூலம் அவர் நிரூபித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























