Kalai Thiruvizha 2024: ஆடல், பாடலில் ஆர்வமா? 1 முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் கலைத் திருவிழாவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலானமாணவர்கள் கலைத் திருவிழாவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழா அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்று வந்தது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் கலைத் திருவிழா
அதனைத் தொடர்ந்து இக்கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
இதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் கலை அரங்க செயல்பாடுகள் மூலம் வழங்கப்பட்டது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கலையரசன், கலையரசி பட்டம்
மாநில அளவில் கலையரசன், கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவுபடுத்தப்பட்டது.
2024-25 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
கலைத் திருவிழா 2024-25
கடந்த ஆண்டு இக்கலைத்திருவிழா போட்டிகள் "சங்கமிப்போம் சமத்துவம்படைப்போம்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடைபெற்றது. அதுபோன்று இந்த ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆக.28 வரை அவகாசம்
முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பங்கேற்பாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்ய ஆக.28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வெற்றி பெற்றவர்களின் விவரங்களை செப்.3-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தத் தேதி செப்டம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலைத்திருவிழா 2024-25 பிரிவுகள்
2024-25 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பின்வருமாறு ஐந்து பிரிவுகளில் நடைபெறும்.
பிரிவு 1- 1 மற்றும் 2 ஆம் வகுப்பு
பிரிவு 2 - 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை
பிரிவு 3 - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை
பிரிவு 4 - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு
பிரிவு 5 - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























