JEE Main: ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடியா? பரபரப்பு விளக்கம் அளித்த என்டிஏ
ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாவது அமர்வைப் பொறுத்தவரை, பதிவேற்றப்பட்ட விடைக் குறிப்புகள் தற்காலிகமானவை மட்டுமே.- என்டிஏ.

ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடி நடைபெற்றதாகவும் விடைக் குறிப்பில் தவறுகள் நிகழ்ந்திருப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டிய நிகழ்வில், என்டிஏ பரபரப்பு விளக்கம் அளித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாவது அமர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு, கேள்வித் தாள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பதில்களை தேசியத் தேர்வுகள் முகமை அண்மையில் வெளியிட்டது. இதில், பல்வேறு குளறுபடிகள், தவறுகள் நிகழ்ந்திருப்பதாக மாணவர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
9 கேள்விகளில் குளறுபடிகள்
தற்காலிக விடைக் குறிப்பில் 9 கேள்விகள் தவறாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இயற்பியல் பாடத்தில் இருந்து 4 கேள்விகள், வேதியியல் பாடத்தில் 3 வினாக்கள் மற்றும் கணிதப் பாடத்தில் 2 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
எனினும் இதற்கு என்டிஏ பதில் அளித்துள்ளது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுக் கூறப்பட்டு உள்ளதாவது:
வெளிப்படையான தேர்வு செயல்முறை
’’என்டிஏ எப்போதும் ஒரு வெளிப்படையான தேர்வு செயல்முறையையே பின்பற்றி வருகிறது. தேசியத் தேர்வுகள் முகமை தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டவுடன், தேர்வர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட பதில்களைப் பார்க்க அனுமதிக்கிறது. தற்காலிக விடைக் குறிப்புக்கான ஒவ்வொரு சவாலையும் NTA மிகுந்த தீவிரத்துடன் கருதுகிறது.
ஆன்சர் கீயை ஆட்சேபிக்கும் செயல்முறை, அனைத்து தேர்வர்களுக்கும் நியாயமான மற்றும் நம்பகமான அமைப்பை உறுதி செய்வதில் ஒரு முக்கிய பகுதியாகும். "Answer Key Challenge" செயல்முறையின் நோக்கம் எந்தவொரு ஒழுங்கின்மையையும் நீக்கி நியாயத்தை உறுதி செய்வதே.
மதிப்பெண்களைத் தீர்மானிக்கும் இறுதி விடைக்குறிப்பு
ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாவது அமர்வைப் பொறுத்தவரை, பதிவேற்றப்பட்ட விடைக் குறிப்புகள் தற்காலிகமானவை மட்டுமே. JEE (முதன்மை) அமர்வு- IIக்கான இறுதி விடைக் குறிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இறுதி விடைக்குறிப்புகளால் மட்டுமே மதிப்பெண் தீர்மானிக்கப்படுகிறது.
தற்காலிக விடைக்குறிப்புகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது சரியானதோ, விரும்பத்தக்கதோ அல்ல. அதனால், தேவையற்ற சந்தேகம் மற்றும் பதற்றத்தை உருவாக்கும் அறிக்கைகளால் தேர்வர்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. இதை அனைத்துத் தேர்வர்களுக்கும் NTA அறிவுறுத்தவும் தெரிவிக்கவும் விரும்புகிறது’’.
இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

