அரசுப் பள்ளியில் ITI பயிற்சி மையங்கள்; வெளியான முக்கிய உத்தரவு! வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுமா?
ஒவ்வொரு பள்ளியிலும் ITI-க்கு குறைந்தபட்ச நிலத் தேவையாக 0.5 ஏக்கர் (50 சென்ட்) நிலம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ITI) நிறுவுதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ITI) அமைப்பதற்கான செயல்முறை மற்றும் தகுதித் தணிக்கைகள் (Criteria) குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் கீழ்க்கண்ட வசதிகள் கொண்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் விவரம் கோரப்படுகிறது.
- ஒவ்வொரு பள்ளியிலும் ITI-க்கு குறைந்தபட்ச நிலத் தேவையாக 0.5 ஏக்கர் (50 சென்ட்) நிலம் இருக்க வேண்டும்.
- ஏற்கெனவே கட்டப்பட்ட செய்முறை அறைகள், ஆய்வகங்கள் அல்லது பிற கட்டிடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இருந்தால் அத்தகைய பள்ளிகளை ITI-அமைப்பதற்கு பயன்படுத்தலாம்.
- தொழில் பயிற்று நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
- தொழில் மண்டலங்கள் / தொழில் சாலைகள் / தொழில் துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
ஆகவே மேற்காண் வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.






















