"விஞ்ஞானிகள் உருவாவது கிராமத்தில்தான்" குழந்தைகளின் அதிசிறந்த கண்டுபிடிப்புகளை கண்டு வியந்த இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ்
விஞ்ஞானிகள் உருவாவது கிராமத்தில் தான்! பள்ளி மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுங்கள்!. இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் பேச்சு!.

விஞ்ஞானிகள் உருவாவது கிராமத்தில் தான்!. பள்ளி மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுங்கள்!. இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் பேச்சு!.
திருப்பத்தூர்: கிராமத்தில் இருந்துதான் விஞ்ஞானிகள் உருவாகுவதாக பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள யுனிவர்சல் என்ற தனியார் பள்ளியில் பள்ளி தாளாளர் சிவப்பிரகாசம் தலைமையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் கலந்து கொண்டார்.
அறிவியல் கண்காட்சி
அப்போது பேசிய விஞ்ஞானி, “அறிவியல் என்பது ஒரு மனிதனை வாழ்க்கை முன்னேற்றத்தை அடைய செய்யும். பாடங்களில் கற்கும் அறிவியல் செயல் முறையில் பயன்படுத்தும் பொழுது பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளிலும் வாழ்க்கை தரத்தையும் தொழில்நுட்பம் உயர்த்தும். இவை அனைத்தும் குழந்தை பருவத்தில் இருந்தே துவங்குகிறது .
நல்ல எதிர்காலத்திற்கு குழந்தை பருவத்திலிருந்து பயிற்சிகள் துவங்க வேண்டும். அதுவும் கிராமங்களில் இருந்து துவங்குகிறது. கேரள மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து, நான் தற்போது ஐஎஸ்ஆர்ஓ வில் பணிபுரிகிறேன். அதற்கு முக்கியமான காரணம் இதுபோன்று பயிற்சி அளிக்கும் பள்ளிகள்.
வருங்காலத்தை வளப்படுத்தும்
அரசு பள்ளிகளில் நான் பயின்றேன். நான் பயின்ற காலங்களில் இதுபோன்று அறிவியல் கண்காட்சிகள் நடப்பது கடினம். தற்போது பன்மடங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆர்வமுடன் மாணவர்களுடன் இணைந்து அறிவியல் கண்காட்சிகளில் பங்களிக்கின்றனர். மழலையர் குழந்தைகளும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பது வருங்காலத்தை வளப்படுத்தும்” என்று பேசினார்.
பின்னர் எல்.கே.ஜி முதல் 11ம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் பங்குபெறும் வகையில் வகுப்பு வாரியாகவும், சந்திரயான், மங்கள்யான், ஹாரியபட்டா, இஸ்ரோ போன்ற பெயர்களை வைத்து இருந்த அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதோடு ஒவ்வொரு மாணவர்களும் செய்த படைப்புகளை பார்வையிட்டு அவர்களுக்கு உண்டான மதிப்புகளையும் வழங்கினார்.
பள்ளி மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் நாட்டுக்கு தேவையான அறிவியல் சிந்தனைகளை இஸ்ரோவில் இடம் பெற செய்யும் அளவிற்கு இருக்கிறது என்றும் கூறினார்.
அதிசிறந்த கண்டுபிடிப்புகள்
நாட்டில் நடக்கும் திருட்டை தடுக்கும் வகையில் பீரோவில் வைக்கும் நகைகளின் திருட்டை தடுக்கும் விதமாகவும், குடிபோதையில் வாகனம் இயக்கும் போது அந்த வாகனம் இயங்காமல் போவது குறித்தும், நகரத்தில் நடக்கும் மாசு காட்டுபட்டை தடுக்கும் வகையிலும், பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாகவும், ஊனமுற்றோர், முதியோர்களை கவனித்து கொள்ளும் வகையில் புதிய ரோபோ உள்ளிட்ட எண்ணிலடங்காத வகையில் மாணவர்கள் அதிசிறந்த கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்து இருந்தனர்.
அதனை கண்டு இஸ்ரோ விஞ்ஞானி விரைவில் இந்த பள்ளியில் இருந்து மாணவர்களை இஸ்ரோவிற்கு அழைத்து செல்வேன் என்றும் கூறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.























