இந்திய பெண்ணுக்கு ரூ.9.05 கோடி பரிசு: உலக ஆசிரியர் விருதை வென்ற ரூபிள் நாகி- யார் இவர்? எதற்கு?
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆசிரியை ரூபிள் நாகி, உலகளாவிய ஆசிரியருக்கான ரூ.9.05 கோடி பரிசையும் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர் ரூபிள் நாகி (Rouble Nagi) மதிப்புமிக்க உலகளாவிய ஆசிரியர் (Global Teacher Prize) விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு 1 மில்லியன் டாலர் அதாவது 9.05 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற வருடாந்திர உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டின்போது,
நூற்றுக்கணக்கான கற்றல் மையங்களை உருவாக்கியதன் மூலம் கல்வித்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை விருதினைப் பெறும் பத்தாவது ஆசிரியர் ரூபிள் நாகி ஆவார். அவருக்கு முன்னதாக, கென்யாவின் தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர், வன்முறைக்கு எதிரான பாடங்களைக் கற்பிக்கும் பாலஸ்தீன தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள இன்யூட் கிராமத்தில் கற்பித்த கனடிய ஆசிரியர் ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ரூபிள் நாகியின் பெயரும் இணைந்துள்ளது இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
யார் இவர்?
ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் ரூபிள் நாகி. 1980ஆம் ஆண்டு பிறந்த இவர் ஆசிரியராகவும் கல்வியாளராகவும் பணியற்றி வருகிறார்.

ரூபிள் நாகி செய்தது என்ன?
ரூபிள் நாகி கலை அறக்கட்டளை (Rouble Nagi Art Foundation) மூலம் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை அவர் நிறுவியுள்ளார். இந்த மையங்களின் முக்கிய நோக்கம், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும்.
ஓவியக் கல்வி
அத்துடன், ஏற்கனவே பள்ளியில் படித்து வரும் குழந்தைகளுக்குத் தேவையான கூடுதல் கல்வி ஆதரவையும் இவை வழங்குகின்றன. கற்பித்தலைத் தாண்டி, எழுத்தறிவு, அறிவியல், கணிதம் மற்றும் வரலாறு போன்ற பாடங்களை அடிப்படையாகக் கொண்ட கல்விசார் ஓவியங்களை (Murals) வரைந்து, கற்றலை எளிமையாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் மாற்றியுள்ளார்.
விருது குறித்து ரூபிள் நாகி பேசுகையில், "இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் தருணம். 24 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய இடத்தில் 30 குழந்தைகளுடன் தொடங்கிய எனது பயணம், இன்று பத்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளைச் சென்றடைந்துள்ளது என்பது நம்பமுடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற எனது சிறுவயது கனவை, பெரியவளான பிறகு நனவாக்கியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தனக்குக் கிடைத்த 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை, ஏழை மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வி பயிற்சி வழங்கும் ஒரு நிறுவனத்தை நிறுவப் பயன்படுத்தப் போவதாக ரூபிள் நாகி அறிவித்துள்ளார். அவரது இந்த முயற்சி, சமூக மாற்றத்திற்கான ஒரு புதிய பாதையைத் திறக்கும் என்று கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















