புதுச்சேரியில் உயர்கல்வி மாணவர்களுக்கு குட் நியூஸ்! 100% கட்டண விலக்கு: ஆளுநர் அதிரடி உத்தரவு
புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கட்டணத்துக்கு விலக்கு அளித்து ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல்.

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கட்டணத்துக்கு விலக்கு அளித்து ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கட்டணத்துக்கு விலக்கு
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
புதுச்சேரி அரசு கல்லூரிகளில் படிக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயனடைவார்கள் கல்வி உதவித்தொகை புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் அரசால் கல்விஉதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்கல்விக்கும் அரசு ஒதுக்கீட்டில் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று அனைத்து உயர்கல்விக்கும் விலக்கு அளிக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை செயலாளர் கிருஷ்ணன் மோகன் உப்பு பிறப்பித்துள்ள உத்தரவில், அரசின் கொள்கை முடிவு உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கவும், நிதி நெருக்கடி தடையாக இருப்பதை தவிர்க்கும் வகையிலும் அனைத்துமாணவர்களுக்கும் 100 சதவீதம் கல்வி கட்டண விலக்குஅளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி அரசு, சமூக கல்லுாரியில் அரசு ஒதுக்கீடு இடங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இது பொருந்தும். 2024-25ம் கல்வி ஆண்டுமுதல் இந்த கல்வித்தொகை வழங்கப்படும். அரசின் இந்த கொள்கைமுடிவு, அனைத்து தொழில்முறை, பிற கல்வி நிறுவனங்களுக்கான நிர்வாக துறைகளுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள், அந்தந்த நிறுவனங்களின் நிதி சார்பு விவரங்களைப்பெற்று, மானிய உதவிக்கான அவர்களின் கணக்குத்தலைப் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அதற்கேற்ப நிதியை விடுவிப்பதற்கு தகுதி வாய்ந்த அதிகாரிகளின் ஒப்புதலை பெற வேண்டும்.
அரசாணை புதுவை லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரிக்கு, 2022-23 கல்விண்டு முதல் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காமராஜர் பொறியியல் கல்லுாரிகளுக்கு இணையாக கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படும். ஆளுநர் உத்தரவின் பேரில் இதற்கான அரசாணை வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி அரசு கல்லூரிகளில் படிக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயனடைவார்கள்.
இதுகுறித்து கல்வியாளர் வை பாலா கூறுகையில்,
புதுச்சேரி முதலமைச்சரும் துணைநிலை ஆளுநரும் இந்த ஒப்புதல் வழங்கியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 33 சட்டமன்ற உறுப்பினர்களால் புதுச்சேரி சட்டமன்றம் இயங்கி வருகிறது. எனவே இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் நடக்க வேண்டும். தவிர அதிகாரிகள் ஆட்சியில் நடக்கக் கூடாது. எனவே முதல்வர் ரங்கசாமி அவர்களும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் அவர்களும் இந்த ஒப்புதல் வழங்கிய ஆணைக்கு அதிகாரிகள் உடனடியாக உயிர் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதனால் ஏழை எளிய மாணவர்கள் மாணவிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கட்டணத்துக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது தற்போது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் மாணவர்களின் கல்வி தடைபடாமல் படிக்க உதவும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.





















