மீனவ மாணவர்களே.! இலவசமாக ஐஏஎஸ் படிக்க அசத்தலான வாய்ப்பு.!விண்ணப்பிப்பது எப்படி.?
மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மீனவ மாணவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்திடும் வகையில் மீனவ மாணவர்கள் குடிமைப்பணிகளில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு குடிமைப்பணி தேர்வு பயிற்சி
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தைச் சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 2025-26 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) சென்னை. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி.?
விண்ணப்பதாரர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் உள்ள சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77. சூரியநாராயணா செட்டி தெரு, இராயபுரம், சென்னை-13 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9384824245 / 9384824407 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.





















