பிளிப்கார்ட் முதல் சொமாட்டோ வரை: உலகை ஆளும் ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்கள்!
ஐஐடி டெல்லியின் 65,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தொழில் துறை, அரசு நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

ஐஐடி டெல்லி அண்மையில் தனது 68-வது நிறுவன நாளைக் கொண்டாடியது. இதையொட்டி வெளியிடப்பட்ட ‘முன்னாள் மாணவர்கள் தாக்க அறிக்கை’ (Alumni Impact Report 2026), அந்த நிறுவனம் உருவாக்கிய ஆளுமைகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் எத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஐஐடி டெல்லியின் 65,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தொழில் துறை, அரசு நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத் தூணாக உள்ளது.
தொழில்முனைவோர்களின் கூடாரம்
ஐஐடி டெல்லியில் படித்த மாணவர்கள் உருவாக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் கோடி ஆகும். பிளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால், சொமாட்டோ சிஇஓ தீபேந்தர் கோயல் ஆகியோர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களே. இவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் மூலம் சுமார் 4.8 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 10,000 முன்னாள் மாணவர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் உள்ளனர்.
அரசு நிர்வாகத்தில் ஆளுமை
வியாபாரம் மட்டுமல்லாது, பொது மக்கள் சேவைகளிலும் ஐஐடி டெல்லி மாணவர்கள் முத்திரை பதித்துள்ளனர்.
- 270-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்.
- 100-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள்.
- மொத்தமாக 650-க்கும் மேற்பட்டோர் அரசு உயர் பதவிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர்களாகப் பணியாற்றுகின்றனர்.
கல்வித் துறையிலும் டாப்
உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் முக்கியப் பொறுப்பிலும், இந்தியாவின் பல்வேறு ஐஐடி-க்களில் 300-க்கும் மேற்பட்டோர் பேராசிரியர்களாகவும் உள்ளனர். கல்லூரி வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய மையத்தின் மூலம் இதுவரை ரூ.477 கோடி நன்கொடையாகத் திரட்டப்பட்டு, கல்லூரி வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து ஐஐடி டெல்லி இயக்குனர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி கூறுகையில், "எங்கள் மாணவர்கள் இன்று உலகளாவிய தலைவர்களாகவும், முன்னோடி தொழில்முனைவோராகவும் உயர்ந்து, சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செய்திகள், ஒவ்வொரு மாணவரும் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கல்லூரியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
























