Central Govt: "உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
Central Govt Higher Education: மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய மசோதா, உயர்கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என விசிக எம்.பி., ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.

Central Govt Higher Education: நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் மத்திய அரசின் கைக்குள் செல்லும் புதிய மசோதாவை பாஜக முன்னெடுப்பதாக, விசிக எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்கு ஆபத்து - ரவிக்குமார் எச்சரிக்கை
நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் மத்திய அரசின் கைக்குள் செல்லும் புதிய மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக, விசிக எம்.பி., ரவிக்குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பான பதிவில், “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆபத்தான மசோதா ஒன்று அறிமுகமாக உள்ளது. விஸ்கிட் பாரத் சிக்ஷா அதிஷ்டான் சட்ட மசோதாதான் அது. முன்பே அது அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதுதான். இந்த கூட்டத் தொடரில் அது சட்டமாக்கப்படும் எனத் தெரிகிறது. அந்த சட்டமானால் இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் ஒன்றிய அரசின் பிடிக்குள் சென்றுவிடும்.
கலைக்கப்படும் கல்வி அமைப்புகள்:
இந்த மசோதா 2025 டிசம்பர் 15 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்கல்விக்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. விஸ்கிட் பாரத் சிக்ஷா அதிஷ்டான் என்ற இந்த அமைப்பு பின்வரும் அமைப்புகளுக்கு மாற்றாக அமையும்: (i) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), (ii) அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), மற்றும் (iii) தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE). ஏற்கனவே உள்ள இந்த அமைப்புகள் தொடர்பான சட்டங்களை இந்த சட்டம் ரத்து செய்துவிடும். சட்டம் மற்றும் மருத்துவக் கல்வியை இந்த சட்டத்தின்கீழ் வராது. அவற்றுக்குத் தனியே சட்டங்கள் உருவாக்கப்படும். பள்ளிக்கல்வியையும் உயர்கல்வியையும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு ஏற்ப வடிவமைப்பதே ஒன்றிய பாஜக அரசின் நோக்கம். அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துவருகிறது.
புதிய சட்டத்தின் பாதிப்புகள் என்ன?
இந்த விஸ்கிட் பாரத் … அமைப்பு நிறுவப்படுவதால் பின்வரும் கேடுகள் ஏற்படும்:
- இந்த சட்டம், மானியங்கள் வழங்கும் பொறுப்பை கல்வி அமைச்சகத்திடம் (MoE) ஒப்படைக்கிறது. இதனால் மானிய ஒதுக்கீடென்பது அதிகாரத்துவமானதாகவும், தன்னிச்சையானதாகவும், அரசியல் கணக்கீடுகளுக்குட்பட்டதாகவும் மாறும். ஏற்கனவே இந்தியைப் பயிற்றுமொழியாக ஏற்காத மாநிலங்களுக்கு பள்ளிக் கல்விக்கான நிதியை பாஜக அரசு விடுவிக்க மறுத்துவருகிறது.
- உயர்கல்வியென்பது அரசமைப்புச் சட்டத்தின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. அதை இந்த சட்டம் ஒன்றிய அரசின் அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லும். ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 10 பேர் நேரடியாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டோ, அல்லது மத்திய அரசு பரிந்துரைக்கும் “நிபுணர்கள்” ஆகவோ இருப்பார்கள்.
- VBSA சட்டம் முந்தைய அனைத்து சட்டங்களையும் மேலோங்கி நிறைவேற்றும் (overriding effect) என்பதால், நாட்டின் கூட்டாட்சித் (federal) தன்மைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்
- உயர்கல்வித் தரநிலைகளை நிர்ணயிப்பதில் ‘ஒரே அளவு அனைவருக்கும்’ (one size fits all) என்ற அணுகுமுறை ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஆனால் HECI/VBSA அணுகுமுறை உயர்கல்வியை ஒருசிலருக்கானதாகச் சுருக்குவதையே நோக்கமாகக் கொண்டு, சமத்துவம் குறித்த கேள்விகளை முழுமையாகப் புறக்கணிக்கிறது.
- VBSA சட்டம், உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
- ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ள கல்வியில் மாநில அரசுகளின் செல்வாக்கக் குறைப்பதோடு, மாநில அரசுகள் நடத்தும் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஆளும் கட்சியுடன் அரசியல் மோதலுக்குள் தள்ளும்.
”ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கான புதிய சட்டம்”
இந்திய உயர்கல்வியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக இந்த சட்டம் அமையும். இந்த சட்டத்தை நிறைவேற்றுவது மட்டுமின்றி கல்வியை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டப்படி மறுவார்ப்பு செய்வதற்காகவே திருமதி நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சராக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் அகற்றப்படுவது காக்ரோச் ஜன்தா பார்ட்டியின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படலாம். ஆனால், புதிய அமைச்சர் நியமனம் வினாத்தாள் கசிவு உட்பட உயர்கல்வியின் எந்தவொரு சீர்கேட்டையும் தடுத்துவிடாது என்பதே உண்மை. வினாத்தாள் கசிவு முதலானவை உயர்கல்வியைப் பீடித்துள்ள நோயின் அறிகுறி மட்டும்தான். தேசிய கல்விக் கொள்கை ( NEP) என்பதுதான் நோய். அந்த நோயை ஒழிப்பதே நம் இலக்காக இருக்க வேண்டும்” என விசிக எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























