பள்ளிகளில் புரட்சி..மாணவர்களுக்கு 3ஆம் வகுப்பு முதலே AI கல்வி: புதிய பாடத்திட்டம் அறிமுகம்
CBSE AI Curriculum: சிபிஎஸ்இ பள்ளிகளில் AI புரட்சி! 3-12 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்: எதிர்காலத்திற்கு தயாராகுங்கள்!

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (Computational Thinking)' சார்ந்த புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு மாணவர்களைச் சிறு வயதிலிருந்தே தயார்படுத்தும் மாபெரும் முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.
எப்படி கற்பிக்கப்படும்?
மாணவர்களின் வயது மற்றும் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 3 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு: தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குக் கணினித் திரைக்குப் பின்னால் நடக்கும் சிக்கலான கோடிங் எதுவும் உடனடியாகத் திணிக்கப்படாது. மாறாக, எளிய விளையாட்டுகள், புதிர்கள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் மூலம் தர்க்கரீதியாகச் சிந்திக்கும் திறன் வளர்க்கப்படும்.
- 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு: மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைப் புரிதல் மற்றும் எளிய அளவிலான ப்ரோக்ராமிங் அறிமுகம் செய்யப்படும்.
- 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு: டேட்டா சயின்ஸ், அட்வான்ஸ்டு ஏஐ தொழில்நுட்பங்கள், நிஜ வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பது மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறநெறிகள் (Ethics) ஆகியவை ஆழமாகக் கற்பிக்கப்படும்.
முக்கியத்துவம் என்ன?
எதிர்கால வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சார்ந்தே அமையப் போகின்றன. இந்தச் சூழலில், வெறும் புத்தகங்களை மனப்பாடம் செய்யும் முறையைத் தாண்டி, சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் பகுத்தறியும் திறனை மாணவர்களுக்கு வழங்குவது அவசியம் என்பதை உணர்ந்து இந்த முன்னெடுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இந்தப் புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க, ஆசிரியர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
சிபிஎஸ்இ-ன் இந்த அதிரடி மாற்றம், இந்தியப் பள்ளி கல்விமுறையில் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சிக்கான அடித்தளமாக அமையும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக நேற்று (ஏப்ரல் 2) 9- 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு இருந்தது நினைவுகூரத் தக்கது.
























