![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
AYUSH Counselling: ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: யார் யாருக்கு எப்போது?- விவரம்
ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று (டிசம்பர் 27) தொடங்கி உள்ளது.
![AYUSH Counselling: ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: யார் யாருக்கு எப்போது?- விவரம் AYUSH Counselling TENTATIVE SCHEDULE GOVT QUOTA GOVT. SURRENDERED SETATS FOR ADMISSION TO BAMS BSMS BHMS BUMS COURSES 2022-2023 AYUSH Counselling: ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: யார் யாருக்கு எப்போது?- விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/27/68e689d61e7ea89492d3fc8ab94ddd721672119374630332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கலந்தாய்வு:
ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று (டிசம்பர் 27) தொடங்கி உள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 89 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழகத்தில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் ஆயுஷ் படிப்புகளைக் கற்பித்து வருகின்றன.
ஆயுஷ்படிப்புகள்:
நீட் மதிப்பெண் அடிப்படையில்தான் ஆயுஷ் படிப்புகளின் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் (ஆயுஷ் - சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, நீட் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான ஆயுஷ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.
அரசு ஒதுக்கீடு:
1.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுப் பிரிவினருக்கும் (580 முதல் 453 நீட் மதிப்பெண்கள் வரை பெற்ற முதல் 203 விண்ணப்பதாரர்களுக்கு) பிற்பகல் 3.30 மணி முதல் நீட் மதிப்பெண்கள் 452 முதல் 426 வரை பெற்ற 203 முதல் 303 பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்த வகையில் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு 2023ஆம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 878 விண்ணப்பங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுக் கல்லூரிகளில் 21 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 68 இடங்கள் என மொத்தம் 89 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
கலந்தாய்வு விவரங்களை முழுமையாக அறிய: https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22123919.pdf
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)