NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
இது ஒரு மாணவரின் கல்வி எதிர்காலம் தொடர்பான விவகாரம் என்பதை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
OCI அட்டையை பதிவேற்றுவதற்கான வசதி இல்லை
பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் OCI அட்டை உள்ளது. NEET-UG 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். இதனால் அகில இந்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளேன்.ஆனால், கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவின்போது கவனக்குறைவாக ‘Foreign National (Other than OCI)’ என்ற பிரிவை தேர்வு செய்துவிட்டேன். அதற்கு பதிலாக ‘OCI’ பிரிவை தேர்வு செய்திருக்க வேண்டும். பின்னர் இந்த தவறை சரிசெய்ய முயன்றபோது, MCC இணையதளத்தில் OCI அட்டையை பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களை பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
MCC இணையதளத்தில் உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்,
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்கள் பதிவு செய்யும்போது தங்களது விவரங்களை அவர்களே பதிவு செய்வதால், மருத்துவ கலந்தாய்வுக்குழு தன்னிச்சையாக ஒரு மாணவரின் பிரிவை மாற்ற முடியாது. நீதிமன்றம் அனுமதித்தால், மாணவரின் பிரிவை மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். மேலும், OCI பிரிவை கோரும் மாணவர், MCC இணையதளத்தில் உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும், அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட கலந்தாய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார், என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி..," இது ஒரு மாணவரின் கல்வி எதிர்காலம் தொடர்பான விவகாரம் என்பதை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, மருத்துவ கலந்தாய்வுக்குழு இணையதளத்தை திறந்து, மனுதாரர் OCI பிரிவை கோருவதற்கான உரிய ஆவணங்களை பதிவேற்ற அனுமதிக்க வேண்டும். மாணவர் ஆவணங்களை பதிவேற்றிய பின்னர், அவற்றை NRI ஆய்வுக்குழு பரிசீலிக்க வேண்டும். எனவே, ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். MCC இணையதளத்தில் OCI அட்டையை பதிவேற்றுவதற்கான வசதி இல்லை. எனவே, ‘Foreign National’ பிரிவை ‘OCI’ என மாற்றி, உரிய ஆவணங்களை பதிவேற்றும் வகையில் இணையதளத்தை மீண்டும் திறக்க வேண்டும் என, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்ததாக, உத்தரவில் கூறியிருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















