Asst Professors: மிஸ் பண்ணிடாதீங்க...உதவிப் பேராசிரியர் பணிக்கு கடைசி வாய்ப்பு! டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த படிப்படியான வழிமுறைகளையும் டிஆர்பி வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை 16.10.2025 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் 30.11.2025 க்குள் பணிஅனுபவ சான்றிதழ்களை மட்டும் பதிவேற்றம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நவம்பர் 13 கடைசி
இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் கோரியதின் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகள் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 11.11.2025 முதல் 13.11.2025 வரை திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 13.11.2025 வரை தேர்வர்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும். 13.11.2025-க்கு பிறகு மாற்றங்கள் கோரி வரப்பெறும் கோரிக்கைகள் பரிசீலிக்க இயலாது.
மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.
- இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
- விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், கடைசி பக்கத்தில் உள்ள சமர்ப்பி" (Submit) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை / திருத்தங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் / திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- கடைசியாக உள்ள "சமர்ப்பி" (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அன்னாரின் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. முந்தைய விண்ணப்பம் கணக்கில் விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் வேறு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ள இயலாது.
- திருத்தம் (Edit Option) மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் (Panel) உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் (Fileds) திருத்தம் செய்யும்பொழுது மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.
- திருத்தம் (Edit Option) செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் கைபேசி எண் (Mobile No) மின்னஞ்சல் முகவரி (Email ID) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.
- இனம் (Community) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.
- விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர், தேர்வுக்கான முழுகட்டணத் தொகையினையும் மீண்டும் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும்போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.
மேலும், 13.11.2025க்குப் பின்னர் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.






















