சென்னை கீழ்ப்பாக்கம் கல்லூரியில் 10+ மருத்துவப் படிப்புகள்! 370 இடங்கள், விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஆர்வம் உள்ள தகுதியான மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சென்னை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை,அரசு கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் கார்டியோசோனோகிராஃபி டெக்னீஷியன் 1 ஆண்டு) (பெண்), ஈ.சி.ஜி / ட்ரெட்மில் டெக்னீஷியன் (1 ஆண்டு), அவசரசிகிச்சை டெக்னீஷியன் (1 ஆண்டு), சுவாச சிகிச்சை டெக்னீஷியன் (1 ஆண்டு), டயாலிசிஸ் டெக்னீஷியன் (1 ஆண்டு), மயக்கமருந்து டெக்னீஷியன் (1 ஆண்டு), தியேட்டர் டெக்னீஷியன் (1 ஆண்டு), மூடநீக்கியல் டெக்னீஷியன் (1 ஆண்டு) (ஆண்), மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவு சேவை மேலாண்மை டெக்னீசியன் (1 ஆண்டு). கேட்டல் மொழி மற்றும் பேச்சு டெக்னீசியன் (1 ஆண்டு). செவித்திறன் சோதனை டெக்னீசியன் ஆண்டு). பன்முக மருத்துவமனைப்பணியாளர் போன்ற சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
370 காலியிடங்கள்
சென்னை, அரசு கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தமாக இணையதளத்தில் 370 காலியிடங்கள் உள்ளன. விவரங்களை https://kilpaukmedicalcollege.in/ என்ற பலகையில் காணலாம்.
என்ன தகுதி?
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பயில, விண்ணப்பதாரர் 31.12.2025 அன்று 17 வயதை நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். தெரிவு/ தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறாக பத்தாம் வகுப்பு / மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5% இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.
செப்டம்பர் 22 கடைசி
விண்ணப்பப் படிவங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் உள்ள அலுவலகத்தில் கட்டணமின்றி வழங்கப்படும். விண்ணப்பங்களை தொடர்புடைய ஆவணங்களுடன் நிரப்பி 22.09.2025-க்குள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
முக்கியத் தேதிகள்
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை முறை 22.09.2025 வரை மட்டுமே பதிவு செய்யப்படும். முழு மாணவர் சேர்க்கை செயல்முறையும் 30.09.2025 அன்று நிறைவுபெறும். 06.10.2025 முதல் வகுப்புகள் தொடங்கும். இதற்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்துடன் மேனிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுசான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் (பொருந்துமாயின்), சாதிச்சான்றிதழ், வயதுச்சான்று (பிறப்புச் சான்றிதழ் / பள்ளிச் சான்றிதழ்), மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்துமாயின்), ஆதார்அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
தெரிவு செய்யும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி முற்றிலும் தகுதி மற்றும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையும். கலந்தாய்வின்போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும்.
சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் அடிப்படையிலான சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு இந்த வாய்ப்பை தகுதியுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பொருந்தக்கூடிய விதிகளுக்குட்பட்டு "வெற்றி நிச்சயம்" திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு
விண்ணப்பதாரர்கள் 9080461254 என்ற உதவி எண்ணிலோ, kilpaukmedicalcollege.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் பயில ஆர்வம் உள்ள தகுதியான மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















