ராமநாதபுரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது
’’காதலனுடன் பேசும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மகள் உறவுமுறை என்றும் பாராமல் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்’’

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு ராஜா (25). இவரும் 25 வயது பட்டதாரி பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். கருப்பு ராஜா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் பேசுவதையும், பழகுவதையும் கருப்பு ராஜா நிறுத்தினார்.
இவர்களின் காதல் அந்தப் பெண்ணின் சித்தப்பா உறவுமுறை கொண்ட முனியசாமி (45) என்பவருக்கு தெரிந்துள்ளது. உடனே முனியசாமி அந்த பெண்ணிடம் கருப்பு ராஜாவை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி ஊரின் ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதிக்கு வரச்சொல்லி உள்ளார். அதன்படி அந்த பெண்ணும், கருப்பு ராஜாவும் நள்ளிரவு 12 மணிக்கு அந்த இடத்திற்கு வந்துள்ளனர். ஏற்கனவே அங்கு வந்து முனியசாமி ஒளிந்து நின்றிருந்தார். அந்த பெண்ணும் கருப்பு ராஜாவும் மீண்டும் பேசி நெருக்கமாக இருந்துள்ளனர். அதையும் முனியசாமி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த முனியசாமி அவர்களிடம் அந்த வீடியோவை காட்டினார். அதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே முனியசாமி கருப்பு ராஜாவை அங்கிருந்து, அனுப்பிவிட்டு அந்த பெண்ணை மட்டும் இருக்க வைத்தார். அந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மகள் உறவுமுறை என்றும் பாராமல் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை முனியசாமி மதுரைக்கு அழைத்து வந்து, திருட்டுத்தனமாக தாலி கட்டி, அதையும் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை முனியசாமி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிகிறது. அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய காட்சியை முனியசாமி அவரது செல்போனிலேயே வைத்துள்ளார். இந்தநிலையில் முனியசாமியின் மனைவி தற்செயலாக செல்போனை பார்த்துள்ளார். அதில் அந்தப் பெண்ணும் முனியசாமியும் திருமணம் செய்தபடி இருந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து முனியசாமியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

பின்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரிடமும் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனையடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், இதுகுறித்து பரமக்குடியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். பின்னர் முனியசாமியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் காதலன் கருப்பு ராஜாவை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டியதாக முனிசாமியின் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்





















