அடப்பாவிகளா.... இப்படியா திருடுவீங்க; போலி செயலியால் வந்த வினை... ரூ. 2 லட்சம் மோசடி
செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து வங்கியின் விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை திருடப்பட்டது.

புதுச்சேரி: தனியார் வங்கியின் பெயரில் பரிசு விழுந்துள்ளதாக கூறி போலி வங்கி செயலியை பதிவிறக்கம் செய்து, சுல்தான்பேட் நபர் ரூ.1.23 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
போலி வங்கி செயலி
சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த ஆண் நபரின், வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, தனியார் வங்கியின் பெயரில் பரிசு விழுந்துள்ளதாக கூறி போலி மொபைல் செயலி வந்துள்ளது. அதனை நம்பி, அந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கியின் விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்து ஏமாற்றியுள்ளார்.
ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம்
அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர், வீட்டிலிருந்த படி ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய மர்மநபர் தெரிவித்த ஆன்லைனில் பல்வேறு தவணைகளாக 90 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்து, கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வந்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
கவுண்டம்பாளையத்தை ஆண் நபர் ஒருவர், ஆன்லைனில் இந்தியா விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரத்தை பார்த்து உள்ளார். அந்த விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, எதிர்முனையில் பேசிய நபர், தன்னை இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிர்வாகி போல், அறிமுகப் படுத்தி கொண்டுள்ளார். அதில், தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும், அதற்கான விண்ணப்பம் மற்றும் செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை நம்பி மர்ம நபருக்கு 16 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி இழந்துள்ளார். இதுபோல் மூன்று பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் கூறுகையில்;
பொது மக்களை மும்பை சைபர் கிரைம் போலீசார் பெயரை கூறி, பார்சலில் போதைப் பொருள் வந்துள்ளது என, மிரட்டுவது. வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு புதுப்பிக்க வேண்டும் எனவும், அதற்காக பாஸ்வேர்டு, ஓ.டி.பி., (otp) எண்ணை வாங்கி, பணம் பறிப்பது.
டெலிகிராம், இன்ஸ்டாகிராம் பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில், டாஸ்க்கை முடித்தால், அதிக பணம் தருகிறோம் எனக் கூறி ஏமாற்றுவது. போலி விளம்பரங்களை செய்து, பணம் பறிப்பது. பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என பல்வேறு வகையில் மோசடி கும்பல், பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல், 65.2 கோடி ரூபாயை பொது மக்களை ஏமாற்றி அபகரித்துள்ளனர். இதில், பெண்களுக்கு எதிரான 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வழக்குகளில், குற்றவாளிகளை கைது செய்து, 11 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரை 1930 எண் ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.





















