மயிலாடுதுறையில் தவாக நிர்வாகி வெட்டிப் படுகொலை - காவல் துறை அதிகாரி மீது பரபரப்பு புகார்
மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறை அதிகாரி மீது சந்தேகம் உள்ளதாக அவரது அண்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மறைந்த முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் உறவினர்கள் மற்றும் காவல் அதிகாரி உள்ளிட்ட பலர் மீது சந்தேகம் இருப்பதாக இறந்த நபரின் அண்ணன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் உட்கட்சி தேர்தலுக்கான நிர்வாகிகள் விருப்பமனு பெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு விருப்பமனு தாக்கல் செய்தனர்.

நிர்வாகி வெட்டி படுகொலை
இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மணிமாறன் கலந்து கொண்டு விருப்பமனு கொடுத்துவிட்டு தனது காரில் புறப்பட்டு காரைக்காலுக்கு சென்றுள்ளார். மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து இரண்டு கார்களில் வந்த ஏழு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் மணிமாறனின் காரை வழிமறித்து, கொடூர ஆயுதங்களால் அவரின் முகத்தில் சரமாரியாக முகம் சிதைந்தயும் அளவிற்கு வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் பரிதாபமாக துடித்து உயிரிழந்தார்.

ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை
இறந்த மணிமாறன் கடந்த 2021 -ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்து தேவமணி கொலை வழக்கில் முதலாவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐந்து தனிப் படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
இந்நிலையில் இறந்த மணிமாறனின் அண்ணன் காளிதாசன் என்பவர் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் காரைக்காலில் கொலை செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தேவமணியின் மகன் பிரபாகரன், தேவமணியின் மைத்துனர் காவல்துறையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணி புரியும் மணக்குடி ராமமூர்த்தி அவரது மகன் அருண்குமார், திருநள்ளார் அரக்குடியைச் சேர்ந்த புருஷோத்தமன் அத்திப்பொடுகையைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் இந்த படுகொலை நடைபெற்றிருக்க வேண்டும் என்றும், நான் குறிப்பிட்ட எதிரிகளை கைது செய்து உரிய விசாரணை மேற்கொண்டு தன் தம்பியின் படுகொலைக்கு நீதி வழங்கும் மாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.






















