Crime: 5 இளைஞர்களை கத்தியால் குத்திய பெண்; மயிலாடுதுறை பரபரப்பு - நடந்தது என்ன..?
திருமண பேனரை கிழித்தது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் கத்தியால் கிழித்ததில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![Crime: 5 இளைஞர்களை கத்தியால் குத்திய பெண்; மயிலாடுதுறை பரபரப்பு - நடந்தது என்ன..? Mayiladuthurai crime news sensation after woman stabbed five youths TNN Crime: 5 இளைஞர்களை கத்தியால் குத்திய பெண்; மயிலாடுதுறை பரபரப்பு - நடந்தது என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/1cad29220eb89a1ccf3ba47bd672fd791682659090828186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோழி குத்தி கிராமம் எம்ஜிஆர் நகரில் உள்ள இளம்பருதி என்பவரின் வீட்டு திருமண நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. திருமண விழாவிற்காக மணமகனின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த 24 வயதான விக்னேஷ், 22 வயதான பிரவீன், 20 வயதான அஜய் ஆகிய மூவரும் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில் மகிமைராஜ் என்பவர் வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்ட அந்த பேனரை திருமணம் முடிந்தும் எடுக்காததால் பேனரை மகிமைராஜ் மற்றும் அவரது மனைவி கிளாரியா கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்னேஷ், பிரவீன், அஜய், அம்பிகா, கவிதா ஆகியோர் சென்று கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரமடைந்த மகிமை ராஜ் மற்றும் அவரது மனைவி கிளாரியா ஸ்டிக்கர் வெட்டும் கத்தியால் 5 பேரையும் சரமாரியாக கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஐந்து பேரும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதலில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த மகிமைராஜை அங்கிருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் மகிமை ராஜை மீட்டு பாதுகாப்பாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் கத்தியால் கிழிக்கப்பட்டு படுகாயம் அடைந்த விக்னேஷ், பிரவீன், அஜய் ஆகிய மூவரையும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோதல் சம்பவம் குறித்து மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி மகிமைராஜின் மனைவி கிளாரியா சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)