மேலும் அறிய
மதுரை மேயர் கணவருக்கு, வரி முறைகேடு வழக்கில் ஜாமின் மறுப்பு! பரபரப்பு உத்தரவு !
மேயரின் கணவர் பொன் வசந்த் மற்றும் பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேயர் கணவர் மற்றும் மேயர்
Source : whats app
மதுரை மாநகராட்சி வரி முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மேயரின் கணவர் பொன்.வசந்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
மாநகராட்சியில் முறைகேடு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்கள், நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதில் 2022-2023-ஆம் ஆண்டுகளில் பல கோடி ரூபாய் வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது, தெரியவந்தது. இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது, ஆய்வில் தெரிய வந்தது. இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு அப்போதைய ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.
அதிரடி விசாரணை
இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்... வரி குறைப்பு செய்வதற்காக, அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி, முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறப்பட்டது. இந்த வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
அதன்படி வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், வரிவிதிப்புகுழு தலைவரின் கணவர் கண்ணன், செந்தில்பாண்டியன்,ரவிச்சந்தி ரன், ஜமால் நஜிம், பாலமுருகன், கருணாகரன், ரவி, முகம்மதுநூர், செந்தில்குமரன், ரெங்கராஜன், கார்த்திக், சகா உசேன், ராஜேஸ்குமார், சதீஸ், தனசேகரன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைதான மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
ஜாமின் மனுவை தள்ளுபடி
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான விசாரணைக்குழு விசாரணை நடத்திவரும் நிலையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரி முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் மற்றும் பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மாவட்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி சிவகடாட்சம் மேயரின் கணவர் பொன் வசந்த் மற்றும் பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















