சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல், மலேசிய நாட்டு பயணி கைது.

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் பெரும் அளவில் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கிரீன் சேனலில் சிக்கிய கடத்தல் பயணி
நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் இறங்கியவர்களை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் வந்திருந்த 35 வயதுடைய மலேசிய நாட்டு ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர் தன்னிடம் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறி கிரீன் சேனல் (Green Channel) வழியாக வெளியேற முயன்றபோது, ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்ட 4 கிலோ கஞ்சா
விசாரணையின் போது அப்பயணி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவரைச் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரது உடமைகளைச் சோதனையிட்டனர். அதில் அவரது சூட்கேசில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பார்சல்களைக் கண்டுபிடித்தனர். அந்த பார்சல்களில் 4 கிலோ 33 கிராம் எடையுள்ள உயர்தர, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும்.
சர்வதேச கடத்தல் கும்பல் பின்னணி குறித்து தீவிர விசாரணை
இதனைத் தொடர்ந்து ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மலேசியப் பயணியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய மேல்விசாரணையில், அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் "குருவியாக" (Courier) செயல்பட்டு வந்ததும், அக்கும்பல் கொடுத்த பார்சலை சென்னைக்குக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இந்த பார்சலை சென்னையில் பெற இருந்த நபர் யார், பின்னணியில் இயங்கும் போதைக்கடத்தல் வலையமைப்பு குறித்துச் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















